கார்த்திகை மாதம் பிறந்தது... ஐயப்ப பக்தர்கள் சரணகோஷத்துடன் மாலை அணிந்தனர்
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
சென்னை: கார்த்திகை பிறந்துள்ளதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில்களில் சரணகோஷமும், அரோகரா கோஷமும் முழங்கியது. ஐயப்பன், முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இதனையொட்டி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செல்வது வழக்கம். தமிழ் மாதங்களில் பிரசித்தி பெற்ற கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம்.

இன்று புதன்கிழமை கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து சபரிமலையில் செவ்வாய்கிழமை மாலை நடைதிறக்கப்பட்டது. இன்று முதல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை சீசன்
கார்த்திகை முதல் தேதியான இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். குருநாதர் என அழைக்கப்படுபவர், ஒவ்வொரு பக்தர்களுக்கும் மாலை அணிவித்தார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து கொண்டனர்..

பல பக்தர்கள் கோவில்களில் அர்ச்சகர்களிடமும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் அதிகாலையிலேயே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சரண கோஷங்கள் ஒலித்தது.
விற்பனை விறுவிறுப்பு
சபரிமலை சீசனை முன்னிட்டு சந்தனமாலை, ருத்ராட்சமாலை, துளசிமாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஐயப்ப பக்தர்கள், துளசி மணிமாலை மற்றும் கருப்பு, நீலம், காவி வேஷ்டி அணிந்து தினமும் காலை மற் றும் மாலையில் நீராடி, ஐயப்பனை வணங்கி பூஜைகள் செய்வர். சபரிமலை சீசன் தொடங்கியதை முன்னிட்டு கடைகளில் துளசி மணிமாலை மற்றும் கருப்பு, நீலம், காவி வேட்டிகளின் விற்பனையும் சூடுபிடித்தது.

காய்கறிகள் - பூக்கள்
இன்று முதல் 48 நாட்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனையோ, முருகனையோ வணங்குவார்கள். இதனால் அசைவ விற்பனை குறைந்து காய்கறி விற்பனை அதிகரிக்கும். இனிவரும் நாட்களில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலைகளும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications