எர்செல்-மேக்சிஸ் "ஆதாய" பணம் மூலம் 14 நாடுகளில் முதலீடு? கார்த்தி சிதம்பரம் விளக்கம்
சென்னை: சர்ச்சைக்குரிய எர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மூலம் ஆதாயமடைந்த பணத்தையே 14 நாடுகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்திருப்பதாக அமலாக்கப்பிரிவின் ஆவணங்களை சுட்டிக்காட்டி பயோனியர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இச் செய்தியை கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளன. அதே நேரத்தில் இந்த ஒப்பந்த விவகாரத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றன.

இந்த ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவும் அண்மையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தின.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த ஆவணங்களில் லண்டன், துபாய், பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிஸ், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கார்த்திசிதம்பரம் பல லட்சும் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆங்கில நாளேடு பயோனியர் செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் துணை நிறுவனம் மூலம் 14 நாடுகளில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணமோசடி தடுப்பு கூட்டறிக்கையின் கீழ், இந்த 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள முதலீடுகள் குறித்த ஆவணங்களைப் பெறுவதற்கு அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய 2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது; இதேபோல, இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான 'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது. துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும் கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன எனவும் தெரியவந்துள்ளதாக பயோனியர் நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தக ஒப்பந்தத்துக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வழங்கிய ஒப்புதல் முற்றிலும் சட்டவிரோதமானது என அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது பயோனியர்.
இந்த விவகாரத்தைத்தான் இன்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் எழுப்பி ப.சிதம்பரத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கார்த்தி சிதம்பரம், சட்டவிதிகளுக்கு உட்பட்டேநான் தொழில் நடத்தி வருகிறேன். என் மீதான புகாரில் உண்மையில்லை என ஏற்கனவே பல முறை விளக்கம் தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications