நன்றி மறக்காத வைகோ! கருமுத்து கண்ணன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு! நகரத்தார் முறைப்படி இறுதிச்சடங்கு!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் நகரத்தார் முறைப்படி இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டு நேற்று தகனம் செய்யப்பட்டது.
கருமுத்து கண்ணன் மறைவு செய்தியை கேட்டவுடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் உடனடியாக மதுரை சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய வைகோ, மதுரையிலேயே ஒரு நாள் தங்கி கருமுத்து கண்ணன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றிருக்கிறார்.
அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சு.வெங்கடேசன் எம்.பி., ஆகியோரும் அதில் பங்கேற்றனர்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள வீட்டிலிருந்து கருமுத்து கண்ணன் உடல் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு 3.15 மணியளவில் தத்தனேரி மயானத்தில் எரியூட்டப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஹெச்.ராஜா, என பலரும் கட்சி பேதம் பாராமல் கருமுத்து கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார், தொழிலதிபர், கல்வித்தந்தை என பன்முகங்களை கொண்டவர் கருமுத்து கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக நடந்துகொண்டவர் கருமுத்து கண்ணன். தியாகராசர் மில்ஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வந்த இவர், தொழிலாளர்களுடன் சீராக நல்லுறவை பேணியவர்.

அதேபோல் தாம் நிர்வகித்து வந்த தியாகராசர் கலை அறிவியல் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரிடம் கூட ஒரு ரூபாய் டொனேஷன் வாங்கிய வரலாறு இல்லை.
அதிமுக, திமுக என தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனாட்சியம்மன் கோவில் தக்காராக கருமுத்து கண்ணனே தொடர்ந்தார். காரணம் அரசியலுக்கு அப்பாற்பட்ட இவரது அறப்பணியாகும்.
ஹெ.ராஜாவே கருமுத்து கண்ணன் உடலை பார்த்து கலங்கிவிட்டார் என்றால் பாருங்க, அவர் எந்தளவு எல்லோரது அன்பையும் பெற்றிருப்பார் என்று.












Click it and Unblock the Notifications