கோவில்பட்டியில் வைகோவுக்கு கருப்புக் கொடி காட்டிய நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை-பரபரப்பு!
கோவில்பட்டி: மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அவர் போட்டியிடும் கோவில்பட்டியில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். இதற்காக அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கோவில்பட்டியில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்க சென்றார். ஆனால் ஒரு கும்பல் அவர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியது.
இதனால் ஆவேசமடைந்த வைகோ, ஆம்பளையா இருந்தா வாங்கடா என கடும் கோபத்தில் பேசினார். பின்னர் வைகோவை தடுத்தவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று வைகோவுக்கு திடீரென கருப்புக் கொடி காட்டி சிலர் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
வைகோவுக்கு கருப்புக் கொடிகாட்டிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் கோவில்பட்டியில் பரபரப்பும் பதற்றமும் நீடிக்கிறது.
உடுமலைப்பேட்டையில் கடந்த மார்ச் மாதம் தலித் இளைஞர் சங்கர் ஜாதி ஆணவக் கொலைக்குள்ளான போது அதை வைகோ கடுமையாக கண்டித்திருந்தார். அப்போதும் கோவில்பட்டியில் அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பினர் வைகோவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications