Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர் விவகாரம்- இலங்கையை எச்சரித்து எதிர்வினையாற்ற வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து எதிர்வினையில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீனவர் பிரதிநிதிகளை பிரதமரிடமும், வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு அழைத்துச் சென்று மீனவர்கள் தங்களின் குறைகளை அவர்களிடம் நேரில் எடுத்துச் சொல்லி, பிரதமரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வாக்கில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளையும், தமிழக மீனவர் பிரதிநிதிகளையும் சென்னையிலே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த பின்னரும், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகள், டீசல் ஆகியவற்றையும் பறித்துச் சென்றிருக்கிறார்கள். சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களும், இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜனவரி 10ஆம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

3 மாதத்தில் 227 மீனவர்கள் கைது

3 மாதத்தில் 227 மீனவர்கள் கைது

அண்மைக் காலத்தில் மட்டும் இதுவரை 227 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து கடந்த மூன்று மாதங்களாக சிறையிலே வைத்துள்ளது. அவர்களுடைய 77 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைச் சிறையிலே உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, நாகையில் இந்த மாதம் 12ஆம் தேதி முதல், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு, மற்றும் பைபர் படகு மீனவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

30 ஆயிரம் பேர் தொடர் போராட்டம்

30 ஆயிரம் பேர் தொடர் போராட்டம்

மேலும் நாகையில், 8 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் கடந்த 16ஆம் தேதி முதல், கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த 21ஆம் தேதி முதல் நாகை வட்ட மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த நிலையில், நான் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை உடனடியாக நாகைக்கு அனுப்பி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் செய்து, அவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளச் செய்தேன். அங்கே உண்ணாவிரதம் இருந்த மீனவர்களின் பிரதிநிதிகள் 11 பேரை டி.ஆர். பாலு, அந்தத் தொகுதியின் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் தலைமையில் பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்திக்கச் செய்தேன். அவர்களும் சந்தித்து மனு அளித்து தாங்கள் அனுபவித்து வரும் துயரங்களை விளக்கியுள்ளனர்.

மீண்டும் 22 பேர் கைது

மீண்டும் 22 பேர் கைது

பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுவதாக உறுதியளித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள செய்தி வந்திருப்பது மிகவும் கொடுமையானது.

தமிழக பத்திரிகையாளர் கைது

தமிழக பத்திரிகையாளர் கைது

இது மீனவர்களின் பிரச்சினை என்றால், இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் படம் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தமிழ் பிரபாகரன் என்பவரையும் சிங்கள அரசு கைது செய்தது. அந்தச் செய்தி ஏடுகளில் வெளி வந்ததும், நானும் வேறு சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தவுடன், அந்தப் பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரன், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தியருக்கு மரியாதை இல்லை

இந்தியருக்கு மரியாதை இல்லை

சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்ததாகவும், அத்து மீறிச் செயல்படவில்லை என்றும், புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த போது இலங்கை ராணுவ வீரர்களால் துப்பாக்கி முனையில் வளைக்கப்பட்டதாகவும், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளன் என்று சொன்னதாகவும், உடனே அவர்கள் கை விலங்கிட்டுக் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், அங்கே இந்தியர் என்றாலே மரியாதை கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழக தம்பதி கைது

தமிழக தம்பதி கைது

இலங்கையிலே இந்தியர் என்றால் எந்த அளவிற்கு மரியாதை கிடைக்கிறது என்பதை பத்திரிகையாளரின் இந்தப் பேட்டியிலிருந்தே இந்திய அரசு புரிந்து கொள்ளலாம். இதையும் தொடர்ந்து நேற்றைய தினம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவரை சிங்கள போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில், புடவை வியாபாரம் செய்வதற்காக அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்கள் மட்டக்களப்பு பகுதியில் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது.

எதிர்வினையில் ஈடுபட்டாக வேண்டும்

எதிர்வினையில் ஈடுபட்டாக வேண்டும்

இதையெல்லாம் மத்திய அரசு உடனடியாக ஆழ்ந்த கவனத்திலே எடுத்துக் கொண்டு முறைப்படி இலங்கை அரசுக்குக் கடும் எச்சரிக்கை செய்து எதிர்வினையில் ஈடுபட்டாலொழிய பிரச்சினைகள் தீரப் போவதில்லை.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லையே..

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லையே..

தமிழகத்தின் சார்பாக மத்திய அரசு தொடர்ந்து கடிதங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்தும், கண்துடைப்பு காரியங்கள் தான் நடைபெறுகின்றனவே தவிர, ஆக்கப் பூர்வமாக மீனவர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான தீவிர நேரடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்பது தான் நமக்குத் தீராத வேதனையாக உள்ளது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+