மீண்டும் சேர்ந்த ஸ்டாலின், அழகிரி.. சேர்த்து வைத்த கருணாநிதி.. குடும்பத்தில் நடக்கும் மாற்றம்!
திமுக தலைவர் கருணாநிதியால் தற்போது ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் பேச தொடங்கி இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் தற்போது ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் பேச தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் உறவில் இருந்த பிரச்சனை மறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு இவர்கள் திரும்பி இருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இயல்பாக பேசி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.

பெரிய விரிசல்
ஸ்டாலின், அழகிரி உறவில் நீண்ட வருடங்களாகவே பிரச்சனை நிலவி வந்தது. செய்தித்தாள் நிறுவனம் ஒன்று, திமுகவின் அடுத்த தலைவர் என்று யார் என்று கருத்து கணிப்பு வெளியிட்டு, அதில் ஸ்டாலினை தேர்வு செய்ததில் இருந்தே, இந்த பிரச்சனை நிலவி வருகிறது. அதன்பின் ஸ்டாலின் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டார். அழகிரியும் பெரிய அளவில் பிரச்சனை செய்யாமல் ஒதுங்கியே இருந்தார்.

கருணாநிதியும் பேசவில்லை
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கருணாநிதியும் அழகிரியிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். குடும்பத்தில் நிகழ்ந்த சில கசப்பான நிகழ்வுகளை அடுத்து, இருவருக்குமான பேச்சுவார்த்தை குறைந்தது. கடந்த அழகிரியின் பிறந்த நாளுக்கு பின்பே, மீண்டும் கருணாநிதியும், அழகிரியும் இணக்கம் ஆனார்கள். ஆனாலும் ஸ்டாலின், அழகிரி உறவில் எந்த மாற்றமும் இல்லை.

சேர்த்து வைத்தார்
இந்த நிலையில் ஸ்டாலின், அழகிரி உறவு தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. இருவரும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் எப்போதும் போல பேசி வருகிறார்கள். கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் போன பின் அழகிரி அவரை பார்க்க மதுரையில் இருந்து கிளம்பி வந்தார். அப்போதில் இருந்தே, ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு மீண்டும் உறவில் சுமூகம் எட்டியுள்ளது.

கருணாநிதி மருத்துவமனை
இந்தநிலையில் கருணாநிதி, மருத்துவமனையில் முழு நேரமாக சேர்க்கப்பட்டதே, அழகிரியின் யோசனை என்றுதான் கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு கருணாநிதியை வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே ஆசை. அதற்காகவே வீட்டில் சிறிய ஐசியூவையே உருவாக்கி வைத்து இருந்தார். ஆனால் அழகிரிக்கு என்ன நடந்தாலும் கருணாநிதி உடலுக்கு பிரச்சனை வரக்கூடாது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் தயாராக இருந்தார்.

அழகிரி பேச்சு
கருணாநிதியின் உடல்நிலை குன்றிய போது, அழகிரி ஸ்டாலினை கண்டித்து இருக்கிறார். இனியும் தலைவரை வீட்டில் வைத்து இருப்பது சரியல்ல, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்டாலின், அழகிரியின் சொல்லை அப்படியே தட்டாமல் கேட்டு இருக்கிறார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்.

மீண்டும் ஒற்றுமை
இந்த சம்பவம், ஸ்டாலின் அழகிரி இடையே மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியின் உடல்நிலை திடீர் என்று மோசமானதை அடுத்து ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்துள்ளார். அழகிரிதான் அவருக்கு ஆலோசனை வழங்கியது என்று கூறப்படுகிறது. இது அவர்கள் இருவரின் உறவில் இருந்த விரிசலை சரி செய்து இருக்கிறது.

குடும்ப கூட்டம்
இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு முக்கியமான குடும்ப கூட்டம் ஒன்று கோபாலபுரம் இல்லத்தில் நடந்து இருக்கிறது. இதில் அழகிரிக்கு ஸ்டாலினுக்கும் உள்ள பிரச்சனை குறித்து பேசி தீர்க்கப்பட்டது என்று கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதேபோல் தயாநிதி அழகிரி, உதயநிதி இருவரும் கசப்புகளை மறந்து மீண்டும் பேசி இருக்கிறார்கள். கனிமொழியும் அழகிரியிடம் பேசி இருக்கிறார். இந்த மோசமான சூழ்நிலைக்கு இடையில் கருணாநிதி என்ற ஆலமர அடியில் மீண்டும் கோபாலபுர குடும்பம் ஒன்று சேர்ந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications