தமிழக மீனவர்களின் இடுக்கண்களைக் களைய திமுக தயாராகிறது, விரைவில் தேதி - கருணாநிதி

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
கடல் ஆதாரத்தை நம்பி வாழும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சோதனைகளுக்கு மேல் சோதனையை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பிரச்னைகளின் முழு வடிவத்தையும் எடுத்துக் கூறி வந்தார். பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் தக்க முடிவு எடுப்பதாக அவரிடம் உறுதி அளித்தனர்.
ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்களை இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் நின்றபாடில்லை.
மீனவர் பிரச்னை தொடர்பாக செவிமடுப்பதுபோல மத்திய அரசு காட்டிக் கொண்டாலும், உரிய பயன் விளையவில்லை.
இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு நேரும் கொடுமையை இனியும் தமிழ்நாடு தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.
பிரச்னையின் அவசர அவசியத்தை மனிதாபிமான கண்கொண்டு பார்க்கத் தவறி, பழி வாங்கும் நோக்கத்தோடு இலங்கை அரசின் ஆதரவோடு நடைபெறும் இந்தக் கொடுமையை எவ்வளவு நாளுக்குத்தான் தமிழக மக்களால் தாங்கிக் கொள்ள முடியும்
எனவே, இந்தப் பிரச்னைக்கு கடுமையான மாற்று என்ன என்பதைத் தெரிந்து, தெளிந்து, இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை நேரடியாகவே சந்தித்து, அதில் முடிவு காண்பதற்கு தமிழகம் தயாராகி வருகிறது.
தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் களத்தில் நிற்பதற்கும், அவர்களைக் காப்பாற்ற எத்தகைய இடுக்கண்களை ஏற்பதற்கும் நானும் (கருணாநிதி), என் தலைமையில் உள்ள திமுகவும் தயாராக இருக்கிறது.
இதை எதிர்கொள்ளும் வகையில் போராட்டத்துக்கான தேதி விரைவில் குறிக்கப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications