விடுவாரா கருணாநிதி.. அவரும் இன்று சென்னையில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கிறார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று வேன் மூலம் ஆர்.கே.நகரில் வாக்கு சேகரிக்கவுள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியும் சென்னையில் வேன் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். இதனால் சென்னை இன்று ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
திமுக, அதிமுக கூட்டணித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல மற்ற கூட்டணிகள், கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்து பேசி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா இன்று தனது ஆர்.கே.நகர் தொகுதியில் வேன் மூலம் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் இன்று சென்னையில் உள்ள 7 தொகுதிகளில் வேன் மூலமாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.
கருணாநிதி கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். தொடர்ந்து, அன்று இரவு புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
பின்னர், 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறையிலும், 25ம் தேதி திருவாரூரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, 26ம் தேதி தஞ்சாவூர், 27ம் தேதி திருச்சி, 28ம் தேதி விழுப்புரம், இம்மாதம் 3ம் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சென்னை தீவுத் திடலில்நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் இன்று அவர் 7 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட ஐஸ் அவுஸ் சந்திப்பில் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்கும் கருணாநிதி, ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை (ஆயிரம் விளக்கு தொகுதி), எம்.எம்.டி.ஏ. காலனி (அண்ணா நகர் தொகுதி), முகப்பேர் மேற்கு பஸ் நிலையம் (மதுரவாயல் தொகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் (அம்பத்தூர் தொகுதி), ஆவடி காமராஜர் சிலை (ஆவடி தொகுதி), பூந்தமல்லி பஸ் நிலையம் அருகில் (பூந்தமல்லி தொகுதி) வேனில் இருந்தபடி பேசுகிறார்.
நாளை மாலை மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் (மயிலாப்பூர் தொகுதி), திருவான்மியூர் பஸ் நிலையம் (வேளச்சேரி தொகுதி), மேடவாக்கம் சந்திப்பு (சோழிங்கநல்லூர் தொகுதி), தாம்பரம் அம்பேத்கர் சிலை (தாம்பரம் தொகுதி), பல்லாவரம் பஸ் நிலையம் (பல்லாவரம் தொகுதி), ஆலந்தூர் மின் வாரிய அலுவலகம் (ஆலந்தூர் தொகுதி), சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் (விருகம்பாக்கம் தொகுதி), கோடம்பாக்கம் காமராஜர் காலனி அம்பேத்கர் சிலை (தியாகராயநகர் தொகுதி) ஆகிய இடங்களில் வேன் மூலம் ஆதரவு திரட்டுகிறார்.