பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெ- கருணாநிதி
ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், அதிலே தி.மு. கழகத்தின் மீது குறை கூறியும் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா? ஜெயலலிதா 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மறந்து விட்டதா? "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது" என்று தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்பதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் மறந்து விட்டார்களா என்ன? ஜெயலலிதா மறந்து விட்டாலும், உலகத் தமிழர்கள் மறக்கவில்லை. இன்று இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா வடிக்கும் நீலிக் கண்ணீரைக் கண்டு யாரும் ஏமாறப் போவதில்லை.

17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ண வில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியதை ஜெயலலிதாவே மறந்து விட்டாரா?












Click it and Unblock the Notifications