சசிகலா யார்? இளவரசி யார்? சுதாகரன் யார்? தினகரன் யார்? திவாகரன் யார்? ராவணன் யார்?- கருணாநிதி
அடுத்து, ஜெயலலிதா தனது அறிக்கையில் குடும்ப அரசியல் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அவருடன் நிழலாகத் தொடர்ந்து வரும் சசிகலா யார்? இளவரசி யார்? சுதாகரன் யார்? தினகரன் யார்? திவாகரன் யார்? ராவணன் யார்? அந்தக் குடும்பங்களெல்லாம் ஜெயலலிதாவோடு இரண்டறக் கலந்தவை தானே?
"ஜாஸ் சினிமாஸ்" திரை அரங்குகளையும், டாஸ்மாக்குக்காக மதுவகைகளைத் தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தையும், கொடநாடு எஸ்டேட்டையும், சிறுதாவூர் பங்களாக்களையும், மற்றும் கணக்கிலடங்காத சொத்துக்களையும், பணப் பரிமாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் நிர்வகிப்போர் எல்லாம் யார்? இவ்வளவு அழுக்குகளையும் குவித்து வைத்திருக்கும் பின்னணியில், குடும்ப அரசியல் பற்றி ஜெயலலிதா பேசலாமா?
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலே எந்தத் தரப்பினராவது திருப்தியாக இருந்தது உண்டா? கழக ஆட்சியில் நியமனம் பெற்ற காரணத்திற்காக மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப் பெற்று, அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று அவர்களுக்குச் சார்பாக தீர்ப்பு பெற்ற பிறகும் மீண்டும் அவர்களைப் பணியிலே நியமிக்க மனம் வரவில்லை என்றால் அது கல் நெஞ்சத்தின் அடையாளம் தானே? பிறகு தன்னைத் "தாய்" என்று அழைத்துக் கொள்வதற்கு என்ன தகுதி?
கழக ஆட்சியில் ஒரு சில அதிகாரிகள் அரசுப் பணியில் திறமையாகப் பணியாற்றினார்கள் என்பதற்காக கடந்த ஐந்தாண்டு காலமாக அவர்கள் எல்லாம் எந்த அளவுக்குத் துரத்தியடிக்கப்பட்டுப் பழிவாங்கப்பட்டார்கள்? ஏன், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர், எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள்? திரைப்படங்களுக்கு தமிழிலே பெயர் வைத்துத் தயாரித்தால் அரசின் சார்பில் வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதைக்கூட தங்களுக்குப் பிடிக்காதவர்கள் தமிழில் பெயர் வைத்துத் தயாரித்தால் கூட, அதற்கு வரி விலக்கு மறுத்த ஆட்சி தானே ஜெயலலிதாவின் ஆட்சி!
இன்னும் எத்தனையோ அட்டூழியங்கள், அராஜகங்கள், அதிகார அத்துமீறல்கள், அநியாயங்கள்! இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமான அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடரலாமா? ஏற்கனவே இந்த ஐந்தாண்டுகளில் காடாகி விட்ட நாடு, பாலைவனமாகிப் பாழாகிப் போய் விடாதா? தமிழ்நாட்டு மக்கள் இனியும் அதை அனுமதிக்கலாமா? 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று நான் எழுதியவுடன், எல்லாவற்றிலும் "காப்பி" அடிக்கும் ஜெயலலிதாவும் என்னைப் பின்பற்றி, 234 தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாக இன்றைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும், நான் அல்ல, பேரறிஞர் அண்ணாவே போட்டியிடுகிறார்; தந்தை பெரியாரே போட்டியிடுகிறார்; திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது; உண்மையான திராவிட இயக்கம் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் கழகக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகம் 174 இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் கை சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 5 இடங்களில் ஏணி சின்னத்திலும், மனித நேய மக்கள் கட்சி 4 இடங்களில் கப் அண்ட் சாசர் சின்னத்திலும், புதிய தமிழகம் கட்சி 4 இடங்களில் டி.வி. சின்னத்திலும், மக்கள் தே.மு.தி.க. 3 இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, சமூக, சமத்துவப் படை கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒவ்வொரு இடத்தில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடு கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பெருவாரியாக உங்களுடைய வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்.
தமிழகத்திலே நடைபெறுகின்ற அராஜக, கொடுங்கோன்மை ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் ஆழக் குழி தோண்டிப் புதைத்திட உறுதி மேற்கொள்ள வேண்டிய நேரம் இது!
உண்மையானதொரு ஜனநாயக ஆட்சி உதயமாக உங்கள் அனைவருடைய நல்லாதரவையும் வேண்டி எனது அன்பான கோரிக்கையினை உங்கள் முன் வைக்கின்றேன்.
உங்களுக்காக உழைத்திட உத்திரவிடுங்கள்! சொன்னதைச் செய்வோம்; செய்வதைத் தான் சொல்வோம்!"
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.