விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்!
சென்னை: தற்போது தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்துள்ளனர். எனினும், தவெகவுக்கு ஆதரவாக இயங்கிய அதிமுக அணியைச் சேர்ந்த சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இவர்கள் விஜய் மீது ஏக வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் தவெக அரசை ஆதரித்தனர். இதன் பின்னணியில் இருந்து இயங்கியவர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர்.

ஆனால், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின்படி முதல்வர் விஜய் நடந்துகொள்ளாததால், மேற்கண்ட இருவரைத் தவிர மற்ற 23 பேரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிவிட்டனர். அதிலும் 4 பேர் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இவர்கள் இருவர் மட்டும் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. முதல்வர் விஜய் மீது இவர்கள் இருவருக்கும் வருத்தம் இருக்கிறது என்கிறார்கள்.
என்ன வருத்தம்? என்று சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் தரப்பில் விசாரித்த போது, "தவெகவை ஆதரிக்கும் முடிவு எடுத்தபோது, அமைச்சரவையில் அதிருப்தியாளர்களை இணைத்துக் கொள்வதுடன், மேலும் 2 ஆஃபர்கள் வேண்டும் என பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, சி.வி.சண்முகம் ரிசைன் பண்ணிய ராஜ்யசபா எம்.பி. பதவியை, விராலிமலை விஜயபாஸ்கருக்கு கொடுக்க வேண்டும். விஜயபாஸ்கருக்கு டெல்லி அரசியலுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனால் ராஜ்யசபா சீட் கேட்டார். அதற்கு தவெக தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அதேபோல, தவெக அரசின் டெல்லி பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த பதவியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று பேசினர். அதற்கும் ஒப்புதல் கொடுத்தது தவெக. ஆனால், சொன்ன வாக்குறுதிகளை முதல்வர் விஜய் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகி விட்டது. இதனை இவர்கள் உணர்ந்திருந்தாலும், சொன்னதை செய்யவில்லை என தங்களை சந்திக்க வருபவர்களிடம் தற்போது வருத்தப்பட்டு பேசுகிறார்களாம்" என்று புது தகவல் கிடைக்கிறது.
எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 23 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் இணைந்துவிட்டனர். விஜயபாஸ்கர் எதிர்பார்த்த ராஜ்யசபா சீட் கனவு இல்லாமல் ஆகிவிட்டது. தவெகவுக்கு கிடைக்க இருந்த ராஜ்யசபா எம்.பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து, அக்கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராகிவிட்டார். இதனால், தவெக தலைமையுடன் இன்னும் வலுவான டீலிங் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications