விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?
விழுப்புரம்: விழுப்புரத்தில் 6 அடி உயர அம்பேத்கர் சிலையினை, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் அதிரடியாக அப்புறப்படுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திறப்பதற்காக வைக்கப்பட்ட இச்சிலை, கடைசி நிமிடத்தில் அகற்றப்பட்டதால் விசிகவினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சிலை ஆளும் கட்சியின் கூட்டணி தலைவரான திருமாவளவன் திறக்க இருந்தது என்று தெரிந்து இருந்தும் அரசு அதிரடியாக அகற்றி உள்ளது. ஏன் திடீரென சிலை அகற்றப்பட்டது.. என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும், சமூகநீதி அமைச்சருமான வன்னிஅரசு நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களை வரவேற்று கட்சியினர் உற்சாக வரவேற்பு விழுப்புரம் மாவட்ட எல்லையிலிருந்து கொடுத்து வந்தனர். அதன்படி விழுப்புரம் பழைய மருத்துவமனை எதிரே ஜி.ஆர்.பி., தெருவின் முனையில் 6 அடி உயரம் உள்ள அம்பேத்கர் சிலையினை மாவட்ட தொழிற்சங்க தலைவர் காசிநாதன் ஏற்பாட்டின் பேரில் நேற்று திருமாவளவன் திறப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தனர்.

அப்போது நேற்றிரவு 9 மணியளவில் அந்த இடத்திற்கு திருமாவளவன் வந்தபோது போலீசார் சிலையானது உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து திருமாவளவன், வன்னிஅரசு கட்சி நிர்வாகிகளின் மாலை வரவேற்பினை மட்டும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புதியபேருந்து நிலையம் அருகே போக்குவரத்து துறை அலுவலகம் அருகே விசிக தொழிற்சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
அதனை தொடர்ந்து அனுமதியின்றி ஜிஆர்பி தெருவில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலையனை வருவாய் துறை அதிகாரிகள், ஏடிஎஸ்.பி இளமுருகன், டிஎஸ்பிக்கள் ரூபன்குமார், கந்தசாமி தலமையிலான போலீசார் பாதுகாப்புடன் அந்த சிலையினை அதிகாலை 3 மணியளவில் கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
மேலும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசிய விசிகவினருக்கு உரிய அனுமதி பெற்ற பிறகு அதே இடத்தில் வைத்துக்கொள்ளலாம் என கூறினர். இதனால் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். விசிக தலைவர் திருமாவளவன் திறப்பதற்காக வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை கடைசி நிமிடத்தில் திறக்க முடியாமல் போனதால் விசிகவினர் ஆதங்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் நேற்றிரவு முதல் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. எனினும் உரிய அனுமதிக்கு பின்னர் அங்கு மீண்டும் சில அமைக்கலாம் என அரசு அறிவித்திருப்பதால், அதற்கான அனுமதி பெறும் பணிகளில் விழுப்புரம் மாவட்ட விசிகவினர் இறங்கிஉள்ளனர். அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அரசு அனுமதித்தால், பின்னாளில் சிக்கல் வரும் என்று தெரிவித்த காரணத்தால் திருமாவளவனும் அதிகாரிகளின் கருத்தை ஏற்று அங்கிருந்து வேறு இடத்தில்வைக்கப்பட்டிருந்த சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications