மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு
பெங்களூர்: ''மேகதாது அணை கட்டுவதற்கு 30 முதல் 40 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. சட்டம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுகிறோம். அணைக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசு பார்த்து வருகிறது. மேகதாது அணைகட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான். தமிழ்நாடு அரசு அல்ல'' என்று தமிழகத்தை சீண்டி உள்ளார் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் நேற்று பொறுப்றே்றார். டிகே சிவக்குமார் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார்.

ஏனென்றால் மேகதாது என்பது டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமான ராமநகர் மாவட்டத்தில் வருகிறது. இதனால் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேகதாது அணை கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது முதல்வராகி உள்ளதால் மீண்டும் அவர் மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வரான பிறகு டிகே சிவக்குமார் மேகதாது அணை குறித்து பேசி உள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
''மேகதாது அணை கட்டுவதற்கு கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில் புதிதாக எதுவும் இல்லை. மேகதாது அணைக்கான திட்ட அறிக்கைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அணை விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. சட்டம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுகிறோம்.
அணைக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசு பார்த்து வருகிறது. மேகதாது அணைகட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான். தமிழ்நாடு அரசு அல்ல. அவர்கள் வேலைபயை அவர்கள் செய்யப்பட்டும். எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அளவு குறையும். இதனால் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே தான் கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டும் பணி தீவிரமாகி உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசிடம், கர்நாடகா அரசு அனுமதி கோரியுள்ள நிலையில் டிகே சிவக்குமார் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் மேகதாது அணை விவகாரம் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications