ஒகேனக்கல்லில் தெரியும் ஜெகன்மோகினி குகை! "பேய்" வசித்த குகையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து குறைவாக உள்ளதால் அங்குள்ள ஜெகன்மோகினி குகை வெளியே தெரிகிறது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்கிறார்கள்.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு கோடை காலங்களில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

இங்கு சுற்றுலா வருகை தருவோர் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வார்கள். அங்கு காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களை வாங்கி சாப்பிடுவார்கள்.
இதற்காகவே அங்கு நிறைய ஹோட்டல்கள் காணப்படுகின்றன. பயணிகள் குளித்து முடித்துவிட்டு வருவதற்குள் இவர்கள் சமையல் செய்து வைத்திருப்பர். பின்னர் சுடச்சுட ஆற்று மீனை ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.
இங்கு நீர் வரத்து குறைவாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் பெரிய பாணி காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இருந்த ஜெகன்மோகினி குகை வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
ஜெகன்மோகினி குகை, 1978 ஆம் ஆண்டு வெளியான ஜெகன்மோகினி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அங்கிருந்த பாறையை குடைந்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பேய் வசிக்கும் குகை போன்ற தோற்றத்தில் இது செதுக்கப்பட்டது.
காவிரி நீர் அதிகரிக்கும் போது இந்த குகை நீரால் மூழ்கிவிடும். நீர்வரத்து குறையும் காலங்களில் மட்டுமே இது மீண்டும் வெளியே தெரியும். குகைக்குள் 10 மீட்டர் தூரம் வரை செல்லலாம்.
தற்போது தண்ணீர் குறைந்து குகை தெரிவதால் சுற்றுலா பயணிகள் அந்த குகை உள்ளே சென்று ஜெகன்மோகினி திரைப்பட காட்சிகளை அசை போட்டனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து தற்போது காவிரி நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக குறைந்துள்ளதால் பரிசல் ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு குகையை காண்பிக்கிறார்கள்.
நீர் வரத்து குறைவால் அருவிகளில் நீர் வறண்டு பாறைகள் தெரிகின்றன.














Click it and Unblock the Notifications