மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இதனால் அவர் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே மட்டும் உள்ளார். இந்நிலையில் தான் அவரது கட்சியில் பஹராம்பூர் லோக்சபா தொகுதியில் எம்பியாக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் எம்பி பதவியை ராஜினாமா செய்யும்படி மம்தா கேட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை வைத்து யூசுப் பதானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை கங்குலி முற்றிலுமாக மறுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்து முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. இந்த முறை பாஜகவிடம் தோற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளார். மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் முதல்வராக களமிறங்கிய மம்தா பானர்ஜியே தோற்கடிக்கப்பட்டார். பாபனிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். தற்போது சுவேந்து அதிகாரி தான் பாஜகவின் மேற்கு வங்க முதல்வராக உள்ளார்.
இதன்மூலம் மம்தா பானர்ஜி தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மட்டுமே உள்ளார். முதல்வர், எம்எல்ஏ ஆகியவற்றை இழந்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது மம்தா பானர்ஜி எம்பியாக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுவும் ராஜ்யசபா எம்பி இன்றி லோக்சபா எம்பியாக நினைக்கிறாராம். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பியாக இருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நினைப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. அதில் மம்தா பானர்ஜி எம்பியாக நினைக்கிறார். இதனால் முர்சிடாபாத் மாவட்டம் பஹராம்பூர் லோக்சபா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்பியாக இருக்கும் யூசுப் பதானை ராஜினாமா செய்யும்படி மம்தா பானர்ஜி கேட்டுள்ளார். யூசுப் பதான் ராஜினாமா செய்தபிறகு அதில் களமிறங்கி எம்பியாக மம்தா பானர்ஜி நினைக்கிறார். இதுதொடர்பாக சவுரவ் கங்குலியை வைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
சவுரவ் கங்குலியும், யூசுப் பதானும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளனர். இந்த நட்பின் அடிப்படையில் இருவரையும் தொடர்புப்படுத்தி இந்த செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை சவுரவ் கங்குலி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ''அரசியல் தொடர்பாக என்னை தொடர்புப்படுத்தி வெளியாகி உள்ள செய்தி உண்மையற்றது. உண்மையை சரிபார்க்காமல் செய்திகளை வெளியிட வேண்டாம். என்னிடம் மம்தா பானர்ஜி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதேபோல் நான் யூசுப் பதானை தொடர்பு கொண்டு பேசவில்லை'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications