டாஸ்மாக் வருவாய் உயர்விலேயே கவனம் செலுத்திய ஜெ.- கருணாநிதி காட்டம்
"இந்து" வெளியிட்டுள்ள செய்தியிலேயே "The State Government's financial health is quite bad" என்று எழுதப் பட்டிருந்தது.
டாஸ்மாக் வருவாயை உயர்த்துவதில் தான் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையை மற்ற துறைகளிலும் காட்டியிருந்தால், மொத்த வருவாய் அதிகரித்திருக்கும்.
அரசின் மெத்தனம் தான் இதற்குக் காரணம். இதைச் சமாளிக்க கடன் வாங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஏற்கனவே ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் மாநிலத்தின் மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும். பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழக அரசின் கடன் தவிர மின்வாரியத்தின் கடன் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.
தஞ்சை தேர்தல் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா "ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பேன், கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி யிருக்கிறேன்" என்றெல்லாம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.
2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்றும்; அதன் மூலம் 56 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும் என்றும், மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப் படும் என்றும்;
2012ஆம் ஆண்டுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படும் என்றும், 2013ஆம் ஆண்டுக்குள் 300 மெகாவாட் சோலார் எனர்ஜி பார்க்ஸ் பத்து உருவாக்கப்பட்டு, 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும், சென்னை, மதுரை, திருச்சி, கோவைக்கு சிங்கப்பூரில் உள்ளபடி "மோனோ ரெயில் திட்டம்" செயல்படுத்தப்படும் என்றும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், தென் தமிழகத்தில் "ஏரோ பார்க்" ஏற்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் ஆயிரம் முறை ஜெயலலிதா யோசித்து வெளியிட்டவை தானே? அவைகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை?
இவை மாத்திரமல்ல; கடந்த ஆண்டுகளில் நிதி நிலை அறிக்கைகளில், கூவம் நதியைச் சீரமைக்க ரூ. 3,833.62 கோடியில் பெரும் திட்டம், ஆறுகள் இணைப்பு வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 5,166 கோடி, 3 வழித் தடங்களில் ரூ. 8,350 கோடியில் மோனோ ரெயில் திட்டம், ரூ.1,075 கோடியில் நெமிலிச்சேரியையும் மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா, தேர்வாய்க் கண்டிகை, திருக்கண்டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் என அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயின? விளம்பரக் காற்றில் பறந்து போய் விட்டனவோ!
2012ஆம் ஆண்டிலேயே ஒரே நாளில் 12 கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பெல்லாம் செய்து, ஏடுகளில் எல்லாம் பெரிதாகச் செய்தி வெளியிட்டார்கள். அந்த 12 கம்பெனிகளின் முதலீடும் தமிழகத்திற்கு வந்து அவர்கள் எல்லாம் தொழில்களைத் தொடங்கி விட்டார்களா, அந்தக் கம்பெனிகளில் 36 ஆயிரத்து 855 பேர் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கிறார்களா என்ற விவரங்களை யெல்லாம் அரசின் சார்பில் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது என்று கேட்டிருந்தேன்.ஆனால் ஆட்சியினர் இதுவரை வாயே திறக்கவில்லை. நடந்திருந்தால் அல்லவா நாவசைக்க முடியும்!
முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றதா என்றால் கிடையாது.
பிறகு 100 கோடி ரூபாய் அரசுப் பணத்தைச் செலவழித்து நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தவாறு இரண்டு இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் வந்தனவா? இல்லை என்பது தான் வேதனையான பதில்!












Click it and Unblock the Notifications