சசிகலா, இளவரசி, சுதாகரன்...இருக்கும் போது குடும்ப அரசியல் பற்றி ஜெ. பேசலாமா? -கருணாநிதி
சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரன், திவாகரன், ராவணன் இவர்கள் எல்லாம் இருக்கையில் ஜெயலலிதா குடும்ப அரசியல் பற்றி பேசலாமா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
2011-ல் ஆட்சியை ஆரம்பித்த போது கழக ஆட்சியில் அரசுக்காக வாங்கப்பட்ட கடனையெடுத்துக் காட்டி, அந்தக் கடனின் அளவைக் குறைப்பேன் என்றெல்லாம் அறிவித்தார்.
"தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும்" என்றெல்லாம் தேர்தல் அறிக்கையிலேயே ஜெயலலிதா சொன்னார். ஆனால் தற்போது என்ன நிலைமை? மின்வாரியக் கடன்களைச் சேர்க்காமல், தமிழக அரசுக்கு உள்ள மொத்தக் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய்.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வருடைய தலையிலும் 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை ஏறி இருக்கிறது. 2011ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சி முடிவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, 9-4-2011 அன்று மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாகக் கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை "ஓவர்-டிராப்ட்"டை தமிழக அரசு பெற்றதில்லை" என்று தி.மு. கழக அரசின் சிறப்பான நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டிச் சொல்லியிருந்தார். ஆனால் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் நிலை குறித்து ஆங்கில நாளேடுகள் எல்லாம் சொல்வது என்ன?
2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்தில் பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை ஒரேயடியாக 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்தார்கள்.
2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக வந்த போதும், 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 15-3-2003 அன்றும் 1398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார்.
அன்றையதினம் தான் தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்ட விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து அறிவித்தார். வீடுகளுக்கான மின் கட்டணத்தை 22.13 சதவிகிதமும், கல்வி நிலையங்களுக்கு 16.61 சதவிகிதமும் உயர்த்தினார். அப்படியும் தமிழ்நாட்டில் நிதி நிலைமை என்ன ஆயிற்று?