ராஜபக்சேவை மோடி வாழ்த்தியது கடுமையான கண்டனத்துக்குரியது.. கருணாநிதி
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், இது கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில எதிர்க் கட்சிகள் இதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ராஜபக்சே எப்படிப்பட்ட இனப்படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அவரே திரும்பப் பதவிக்கு வர வேண்டுமென்பது, அரசு அலுவலகங்களில் குற்றவாளியின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவும், ராஜபக்சே புரிந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பது போலவும் தான் இருக்கும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.