கருணாநிதியின் புன்னகை தரிசனம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்
எட்டுமாதத்திற்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் புன்னகை தரிசனத்தைக் கண்ட தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் புன்னகை தரிசனத்தை எட்டு மாதம் கழித்து பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
உடன்பிறப்பே என்று முரசொலியில் எழுதினாலும் சரி, மேடையில் அவர் அழைத்தாலும் சரி திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிடும். விசில் அடித்து கரஒலி எழுப்பி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள் திமுக தொண்டர்கள்.
முதுமை காரணமாக உடல் நலம் குன்றியதால் கடந்த டிசம்பர் மாதம் முதலே கருணாநிதியை பொது இடங்களில் காண முடியவில்லை. அவரது அறிக்கைகள், எழுத்துக்களையும் படிக்க முடியாத தொண்டர்கள் சற்றே சோர்ந்துதான் போய்விட்டனர்.
வீட்டிற்குள் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதில் இருந்தே வீட்டிற்குள்தான் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் தவிர வேறு யாருமே அவரை சந்திக்கவில்லை.
தொண்டர்களின் கவலை
முரசொலி நாளிதழில் கருணாநிதியின் உடன்பிறப்பே கடிதம் காணாத தொண்டர்களின் சோர்வை போக்க அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றி வந்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். அவர் கேக் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினர்.
ஜொலிக்காத கொண்டாட்டங்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைரவிழா கொண்டாட்டத்தின் போதும் கருணாநிதி வருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரில்லாமலேயே விழா கொண்டாடப்பட்டது. இதேபோல முரசொலி பவளவிழாவும் கருணாநிதி இல்லாமலேயே கடந்து போனது. இந்த விழாவிற்கு வந்த தொண்டர்கள் கருணாநிதியின் குரலை கேட்கமலேயே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வாழ்த்துக்கடிதம்
முரசொலி பவளவிழா கொண்டாட்டத்திற்கான கருணாநிதி வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தைப் படித்து உற்சாகமடைந்தனர் தொண்டர்கள். மழை வந்து தொண்டர்களின் உற்சாகத்தை தடுத்தது.
செயற்கை உணவுக்குழாய் மாற்றம்
இன்று காலையில் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை உணவுக்குழாயை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதால் இன்றைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டு மீண்டும் அவர் வீடு திரும்பினார்.
தொண்டர்களுக்கு தரிசனம்
கடந்த 8 மாதகாலம் வீட்டிற்குள்ளேயே மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதி இன்று தொண்டர்களுக்கு தரிசனம் அளித்தார். அவரின் புன்னகை தரிசனத்தைக் கண்டு தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
புன்னகை முகம்
தினசரி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவரது அறிக்கை, பேட்டிகள் முக்கியமாக இடம் பெறும். கடந்த 8 மாதகாலமாக எந்த அறிக்கையும் எழுதவில்லை. இன்று மீண்டும் கருணாநிதியை ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பியதும் வெளியூரில் இருந்த தொண்டர்களும், அவரின் புன்னகை முகத்தைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர்.