நாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்: கடலூரில் கருணாநிதி பேச்சு
கடலூர்: தமிழகத்தை பல முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர், ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் லஞ்சம், லாவண்யம் பெருகிவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மக்களை ஏமாற்றுவதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது கருணாநிதி தெரிவித்தார்.
கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், உள்ளிட்ட 9 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து இன்று கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக அரசியல் கட்சி மட்டுமல்ல... இது ஒரு சமுதாய இயக்கம், சமுதாயத்தில் அடிதட்டு மக்களை கைதூக்கி விடக்கூடிய கழகம் என்றார். நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம், கொள்ளையடிப்பவர்கள் நாட்டில் பெருகிவிட்டதாக கூறினார்.
கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டம். வெள்ளத்தின் போது மக்கள் பெரும் துயரை சந்தித்தனர் என்று கூறிய கருணாநிதி,
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது முதல்வர் வந்து பார்த்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் உங்களின் வேதனையில் பங்கெடுத்தாரா? உங்களின் கண்ணீரை கை நீட்டி துடைத்தாரா? என்று கேட்ட கருணாநிதி,
நாங்கள் உங்களுடன் தோளோடு தோழர்களாக நின்றோம். அதை மறந்து விடாதீர்கள். தேர்தலில் வாக்களித்து உங்களுக்கு சேவை செய்ய வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
உங்களின் உடன்பிறப்புகளாக கருதி எங்களுக்குக் கை கொடுங்கள் என்று வேண்டுகோள் வைத்த கருணாநிதி,
மு.க.ஸ்டாலினுக்கு நீங்கள் கை கொடுத்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆக்டிங் முதல்வராக வேலை பார்த்தவர் பணத்தை கொள்ளையடித்துள்ளார். அவருடைய பெயரைக்கூட நான் சொல்ல விரும்பவில்லை. இதைப்பற்றி நாளிதழ்கள் எழுதியுள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தை பல முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். கருணாநிதி, பக்தவச்சலம், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். நாங்களும் ஆட்சி செய்துள்ளோம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் லஞ்சம், லாவண்யம் பெருகிவிட்டது என்று கூறினார் கருணாநிதி.
மக்களை ஏமாற்றுவதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.
உங்களுக்காக இன்றைக்கும் உழைத்துக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் கேட்க எனக்கு உரிமையிருக்கிறது. உங்களின் குடும்பத்தில் ஒருவன் நான். உங்களின் தம்பிகளில் ஒருவன் நான். உங்களின் பிள்ளைகளில் ஒருவன் நான். இது தேர்தல் பிரச்சாரத்திற்காக பேசப்படும் வார்த்தையல்ல, உணர்வுப்பூர்வமான வார்த்தை என்று கூறிய கருணாநிதி, நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications