முதல் முதலாக தேசியக் கொடியேற்றிய முதல்வர்... தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளார்!
சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றும் அதிகாரத்தை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி. முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வரும் அவர்தான்.
Recommended Video
சென்னை: சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்று போராடி வென்று, முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் என்ற பெருமை பெற்றவர் கருணாநிதி. தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டு அவருடைய இறுதிச் சடங்கு நடக்கிறது.
தமிழக முதல்வராக ஐந்து முறை இருந்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தனர்.
இதை மாற்றி குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி போராடினார்.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதன்படி, அனுமதி கிடைத்து, சுதந்திர தினத்தில் கொடியேற்றிய நாட்டிலேயே முதல் முதல்வர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றார். 1974 ஆகஸ்ட் 15ம் தேதி அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு தற்போது முழு அரசு மரியாதையுடன் உடலடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருடைய உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது.
முதல்வர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த கருணாநிதிக்கு இந்த கவுரவம் மிகவும் பொருத்தமானதே.