திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் கமல்ஹாசன் - கருணாநிதி வாழ்த்து!
சென்னை: செவாலியே விருது பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் கமல்ஹாசன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செவாலியே விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி கூறியுள்ளதாவது:

பிரான்ஸ் நாட்டின் சிறந்த விருதான "செவாலியே"விருது, கலைஞானி நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியினைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். "களத்தூர் கண்ணம்மா"திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இதுவரை 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன்.
ஐம்பதாண்டு காலமாக திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், சிறந்த நடிப்புக்காக மத்திய அரசின் "பத்மஸ்ரீ", "பத்மபூஷன்"ஆகிய விருதுகளையும், தமிழக அரசின் "கலைமாமணி"விருதையும், மேலும் பல தேசிய விருதுகளையும் ஏற்கனவே பெற்றிருக்கிறார். "செவாலியே"விருது பெற்றுள்ள கலைஞானி நடிகர் கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications