மோடிக்கு முக்கியத்துவம் தரும் முரசொலி.. கருணாநிதியும் வாழ்த்து...!
சென்னை: பிரதமர் பதவியை ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் முரசொலி நாளிதழிலும் மோடி செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மே 26ம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி. இன்று முறைப்படி அவர் நாடாளுமன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் மு.க.ஸ்டாலினும் போனில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, கருணாநிதியின் உடல்நலம் குறித்து மோடி விசாரித்ததாக ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மோடி செய்திகளுக்கு முக்கியத்துவம்
மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியின் முதல் பக்கத்தில் மோடி தொடர்பான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள், மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்தும் முரசொலியிலும் திமுகவின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் கருணாநிதியின் ட்விட்டர் பக்கத்திலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன