கருணாநிதி உடல்நிலையில் காலை திடீர் பின்னடைவு.. தீவிர சிகிச்சை.. திருநாவுக்கரசர் தகவல்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில், இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று காவேரி மருத்துவமனையில் நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுடனும், டாக்டர்களுடனும் ஆலோசித்தபோது, கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர். மற்றபடி எந்த மாதிரி சிகிச்சை என்பதெல்லாம் நான் சொல்ல முடியாது. நான் டாக்டர் கிடையாது. கருணாநிதி உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலதிக தகவல்களை மருத்துவமனைதான் தெரிவிக்கும் என்றார்.
கருணாநிதி உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படுவதும், மீள்வதும் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.