வதந்திகளை நம்ப வேண்டாம்.. கருணாநிதி நலமுடன் இருக்கிறார்.. ஆ.ராசா விளக்கம்
திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.3 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.
அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதால், பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த நிலையில் சில நிமிடம் முன், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானது . அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் சீராகி வருகிறது என்று கூறப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை காரணமாக பின்னடைவு சீர் செய்யப்பட்டது.
அவர் நல்ல நிலையில் இருக்கிறார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பேட்டியளித்தார்.