எனக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து!
ஜெயலலிதா 16-5-2011 அன்று முதலமைச்சராகப் பதவி ஏற்றதற்குப் பிறகு, தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை என்னிடமும், அரசுத் தரப்பு வழக்கு குறித்தும் தன்னுடைய அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக்கொண்டது. அந்தத்துறை, குற்றவியல் நடை முறைச் சட்டம் 173(8)-பிரிவின்படி வழக்கில் தொடர்ந்து மேலும் புலன்விசாரணை செய்யவும், உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கெனத் தனியே வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ளவும் முடிவு செய்தது. இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்தும் எனக்கும் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறைக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை செய்வதற்கு சட்டத்தின் அடிப்படையில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் காரணமாக, அரசுத் தரப்பு தனி வழக்கறிஞரை மீறி, தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறைக்கெனத் தனியே வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்து கொள்ள முடியவில்லை. எனக்கும் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறைக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
விசாரணைக்குப் பிறகு உயர் நீதிமன்றம், தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை தொடர் விசாரணை மேற்கொள்வது குறித்தும், தனி வழக்கறிஞரை நியமித்துக் கொள்வது குறித்தும் நான் மேற்கொண்ட நிலைப்பாடே சரியானது என்று தீர்ப்பளித்தது. மேலும், அரசின் தனி வழக்கறிஞரே இலஞ்ச ஒழிப்புத்துறைக்காக வாதாட முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் நான் ஆஜரானேன். 30-1-2012 அன்று உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டதற்குப் பின்னர், இலஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு அனுமதி மனுக்களைத் தள்ளுபடி செய்தும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தும் ஆணையிட்டது.
குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு - 313ன்படி, அவர்களுடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பொருட்டு நீதிமன்றத் தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும்; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து தனக்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும் என்றும், தன்னுடைய எழுத்து வடிவிலான வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது காணொலிக் காட்சி வாயிலாக தன்னுடைய வாக்கு மூலத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும்; செல்வி ஜெயலலிதா சார்பில், விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமலேயே வினாக்களுக்கு பதில்களை அளித்திட செல்வி ஜெயலலி தாவுக்கு சென்னை தனிநீதிமன்ற நீதிபதி முன்பு அனுமதி அளித்ததே, தற்போது விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட தற்கான அடிப்படை ஆகும். சென்னை தனி நீதிமன்ற நீதிபதி, செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கிய அனுமதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபணை தெரிவித்தது.
ஜெயலலிதாவின் கோரிக்கை விசாரணை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப் பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் அவருடைய கோரிக்கையை நிராகரித்து, தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்வளவுக்கும் பிறகுதான் 23-11-2011 அன்று ஜெயலலிதா அவருடைய வாக்குமூலத்தை அளிக்க பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அரசுத் தரப்புத் தனி வழக்கறிஞர் என்ற முறையில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நியாயமானதும் நேர்மையானதுமான நிலைப்பாட்டினாலும்; புலன் விசாரணையை மேலும் தொடர்வது குறித்தும், தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக உயர் நீதிமன்றத்தில் தனியே வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்து கொள்வது குறித்தும், ம்நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு பெறுவது குறித்தும் நீதிமன்றங்கள் மூலம் சாதகமான உத்தரவுகள் கிடைக்காததாலும்; குற்றம் சாட்டப்பட்டோருக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக செல்வி ஜெயலலிதாவைப் பின்பற்றுவோர் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர் அவர்கள் இனி தன்னலம் மிக்க ஆதிக்க சக்தியினர் எனக் குறிப்பிடப்படுவர்.
அந்த ஆதிக்க சக்தியினர், குற்றம் சாட்டப் பட்டோருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கு, அரசுத் தரப்பின் தனி வழக்கறிஞர் என்ற முறையில் நான்தான் அடிப்படைக் காரணம் என்று கருதி, தனி வழக்கறிஞர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு விடாப்பிடியாக முயற்சி செய்தனர். நான் அரசுத் தரப்பு தனி வழக்கறிஞராகவும், அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பதவிகள் வகித்து வந்த காரணத்தால், ஒரே நபர் இரண்டு பதவிகள் வகிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, அரசுத் தரப்பு தனி வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகிவிட வேண்டுமென்று என்னைக் கட்டாயப் படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.