ஆச்சார்யா தரும் அதிர்ச்சித் தகவல்கள்.. கருணாநிதி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா எழுதியுள்ள நூல் குறித்து திமுக தலைவர் கருணாநிதி நீண்ட கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் அந்த அறிக்கையிலிருந்து....
"செல்வி ஜெயலலிதா தரப்பினர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்குவிசாரணையின்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கைப்பயணத்தை "அனைத்தும் நினைவுகளிலிருந்து" என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நூல் ஒன்றைஎழுதி இருக்கிறார்.
இந்த நூலை பெங்களூருவில் 15-11-2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா வெளியிட்டிருக்கிறார். நீதிபதி வேணுகோபால் அவர்களும், மத்தியஅரசின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி அவர்களும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மொத்தம் 33 அத்தியாயங்களும், 336 பக்கங்களும் கொண்ட இந்த ஆங்கில நூலில், இருபத்தைந்தாவது அத்தியாயத்தின் தலைப்பே Case Against Selvi J.Jayalalitha - Chief Minister of Tamil Nadu என்பது தான்! அதில் 206ஆம் பக்கம் முதல் 220ஆம் பக்கம் வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்தவரும், கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரலாக) ஐந்துமுறை பணிபுரிந்தவருமான மூத்த வழக்கறிஞர் திரு.பி.வி. ஆச்சார்யா இந்த வழக்கில் ஆஜரானபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி அவரே நேரடியாகச் சொல்வதைப்போல எழுதியிருக்கிறார். இந்த நூலில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி அவர் எழுதியுள்ள சில முக்கியமான குறிப்புகளை மட்டும் இங்கே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை சென்னையில் தொடங்கியது. அதில் அரசுத்தரப்பில் 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2000க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. அரசுத் தரப்புவிசாரணை முடிவதற்கு முன்னரே, குற்றஞ்சாட்டப்பட்ட செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அதனையடுத்து ஜெயலலிதா அரசு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் வாதாடப் புதிய வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்தது. அதற்குப் பிறகு ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 சாட்சிகள் திரும்பவும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடைய மறு சாட்சியத்தில் அவர்கள் முன்பு சாட்சியம் அளித்தபோது சொன்னவற்றை மறுத்து, அவை உண்மை அல்ல என்று தெரிவித்தனர். மீண்டும் அழைக்கப்பட்ட இந்த சாட்சிகளை புதியதாக நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவோ, அவர்களைப் பிறழ் சாட்சிகளாக நடத்தவோ முன் வரவில்லை.
உச்ச நீதிமன்றம் கருத்துரைத்தபடி, சென்னைத் தனி நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த விசாரணையே கேலிக்கூத்தான விசாரணை (farce of a trial) ஆகும். வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப் பட்டதற்குப் பிறகு, தனி நீதிமன்றத்தில் 45 சாட்சிகளை மேலும் விசாரணை செய்ய வேண்டும் என்று நான் விண்ணப்பித்தேன். 45 சாட்சிகளில் 21 சாட்சிகள் மட்டுமே மீண்டும் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சாட்சிகளை மீண்டும் அழைப்பதற்கு நீண்டகாலம் ஆனது.
சாதாரணமாக விசாரணை நீதிமன்றத்தின் நடை முறைகளின்படி, அடுத்த கட்டமாக குற்றவியல் நடை முறைச்சட்டம் பிரிவு - 313ன்படி குற்றம் சாட்டப்பட்டோர் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக்குக் குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் நேரடியாக நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆணை வழங்கி உள்ளது. எனினும், குற்றம் சாட்டப்பட்டோரை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகிவிட்டது.