சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதாக கூறப்படும் 23 வயது இளைஞர் விஷ்ணு, கஞ்சா கும்பலினரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் குலை நடுங்கச் செய்யும் வகையிலான சம்பவம் அரங்கேறியுள்ளது. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை அருகே விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலரை பிடித்து தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பலினர் விஷ்ணுவை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களால் சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடை இளைஞர் விஷ்ணுவின் உறவினர்கள், பொதுமக்கள் கதறி துடித்தனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி, விஷ்ணுவின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு உண்டானது. உடனடியாக போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications