கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு கருவூலம் - திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு
சென்னை: கவிஞர் அப்துல்ரகுமான் ஒரு கருவூலம் என்றும், தமிழின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர் என்றும் திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்துல் ரகுமானின் இரு நாள் பவள விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய நூலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். கவிக்கோ கருவூலம் என்ற நூலின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். கவிக்கோ அறக்கட்டளைக்கான பொற்கிழியை அப்துல் ரகுமான் பெற்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகரந்த மழை என்ற குறுந்தகட்டை வெளியிட்டார். இசையமைப்பாளர் ஜிப்ரான் குறுந்தகட்டை பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய கருணாநிதி, "எனது இளம்பருவத்தில் வாணியம்பாடியில் நடைபெற்ற கவியரங்கில் அப்துல் ரகுமானோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. அன்று தொடங்கிய அப்துல் ரகுமான் மீதான கவர்ச்சியும் அன்பும், இன்றும் எனக்குத் தொடர்கிறது. அப்துல் ரகுமான் ஒரு கருவூலம். அதைத் தெரிந்தே கவிக்கோ கருவூலம் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அண்ணாவைப் பற்றி "விழுந்தாலும் விதைபோல விழுவார்" என்று ஒரு கவிதையில் கூறினார். அதை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. தனக்குக் கிடைத்த புகழ் எல்லாம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று கருதியவர். தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் கொண்டவர். எல்லோருக்கும் புரியும் வகையில் கவிதை எழுதக்கூடிய அற்புதமான கவிஞர். சமூகம் மேற்கொண்டுவரும் கொள்கையை ஏற்று பிடிக்கும் தீபமாய் திகழ்கிறார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications