சொத்துகுவிப்பு வழக்கு: நீதிபதி பாலகிருஷ்ணாவை மாற்றக்கூடாது என கேட்பது ஏன்?... கருணாநிதி
தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில், தனது சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவை மாற்றக் கூடாது என்றும், புதிய நீதிபதியை நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதற்கு கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நீதிபதி பாலகிருஷ்ணா மேற்கொள்வதற்கு முன்பு நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவும், வேறு சில நீதிபதிகளும் விசாரித்தனர்.அப்போதெல்லாம் இதுபோன்ற கோரிக்கையை முன் வைக்காத ஜெயலலிதா தற்போது மட்டும் கோருவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதேபோல், அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டாமென்று கோராத ஜெயலலிதா தற்போது அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங் விஷயத்தில் மட்டும் அதற்கு முரணாக செயல்படுவது ஏன் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.