மின்மிகை மாநிலமா? சட்டம் ஒழுங்கு நிலை என்ன? வாக்குறுதிகள் என்னாச்சு? ஜெ.க்கு கருணாநிதி கேள்வி
சென்னை: தமிழகம் மின்மிகை மாநிலமாகிவிட்டதா? சட்டம் ஒழுங்கின் நிலைதான் என்ன? வாக்குறுதிகள், அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? என முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழக மக்கள் நலனை முற்றாகப் புறக்கணித்து, எல்லாப் பிரச்சினைகளிலும் ஆணவம் - அலட்சியம் காட்டி,எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நடந்து, நிர்வாகத்தை நிர்மூலப்படுத்தி விட்டு, தற்போது அவருடைய தேர்தல் பிரச்சார முதல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைப் பற்றியெல்லாம் கேட்போர் வாய் பிளந்து கேட்கும் அளவுக்குப் பேசித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே! நீங்கள் சர்வ காலமும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் வானத்திலிருந்து தயவுசெய்து சற்றுக் கீழே இறங்கி வாருங்கள்! நேரிடையாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நிதானமாகப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்! இதோ, 10-4-2016 தேதிய "தி இந்து" தமிழ் நாளேட்டில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்! தலைப்பு - "இளைஞர் படுகொலை, விவசாயி தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள், தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் 6 நோட்டீஸ் - மனித உரிமை ஆணையம் அனுப்பியது!"
இந்தத் தலைப்பில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறு சம்பவங்கள் தொடர்பாகவிளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும், என்னென்ன சம்பவங்கள் என்றும் விரிவாகச் செய்தி வந்துள்ளது. மனித உரிமை ஆணையமே ஒரே மாதத்தில் இந்த அரசுக்கு ஆறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்றால், அ.தி.மு.க. ஆட்சியின் கீர்த்தி எப்படிப்பட்டது என்பது விளங்குகிறதல்லவா? அ.தி.மு.க. அரசுக்கு நீதிமன்றங்கள் வழங்கியிருக்கும் நித்திய கண்டனங்கள் வேறு ஏராளமாகக் குவிந்திருக்கின்றன!
மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் ஆறு என்றால், உயர் நீதிமன்றம் இந்த அரசுக்கு அனுப்பிய நோட்டீஸ் எண்ணற்றவை! அத்துடன் அரசு உயர் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எத்தனை முறை அபராதம் விதித்திருக்கிறது என்றபட்டியலைப் பார்த்தால், ஜெயலலிதாவின் ஆட்சித் திறமை பளிச்சென விளங்கும்! ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றியும், நடவடிக்கைகள் பற்றியும் தமிழ்நாட்டு மக்கள் திருப்தி அடைவது கூட இருக்கட்டும்; அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் திருப்தியோடு இருக்கிறார்களா? ஏன், அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள்,இருப்பவர்களில் எத்தனை பேர் அவருக்குப் பின்னால் என்னென்ன பேசுகிறார்கள்? பதவியிலே இருப்போர், தங்கள் பதவிப் பாதுகாப்புக்காக அவரைப் புகழ்ந்து கூறிக் குளிரச் செய்யலாமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவை மனதாரப் பாராட்டுகிறார்களா?
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி நாளிதழிலேயே செய்தி வந்திருக்கிறதே?ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கிலே தங்கள் பிள்ளைகளையும், குடும்பத்தையும் மறந்து அல்லும் பகலும் பாடுபட்ட வழக்கறிஞர்கள் பலர் என்ற போதிலும், அவர்களில் பலருக்கு இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வில்லையாம்! ஜெயலலிதா விடுதலை பெற்ற பிறகு, அந்த வழக்கறிஞர்களை யெல்லாம் அழைத்துப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்ததாகவும், அதைக்கூடச் செய்யவில்லை என்றும், ஆனால் சில காலம் மட்டும் அந்த வழக்கில் ஆஜரான நவனீத கிருஷ்ணன் போன்றவர்களுக்கு அட்வகேட்-ஜெனரல், டி.என்.பி.எஸ்.சி. தலைவர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகள் வழங்கப்பட்டதாகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
அந்தக் காலத்தில் "கீறல் விழுந்த எச்.எம்.வி. கிராமபோன் ரிகார்ட் மாதிரி சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறாயே" என்பார்கள்! அதைப்போல முதலமைச்சர் ஜெயலலிதா வாயே திறக்க மாட்டார். எப்போதாவது திறந்தால் வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமலே, "தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகஆகிவிட்டது, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது" என்று ஏற்கனவே பலமுறை சொன்னதை, திரும்பத் திரும்பச் சொல்லத் தவறுவதே இல்லை. ஆனால் உண்மை நிலவரம் என்ன?












Click it and Unblock the Notifications