மின்மிகை மாநிலமா தமிழகம்
இந்தக் கேள்விக்கு 10-4-2016 தேதிய "தினமலர்" நாளேட்டிலேயே பதில் உள்ளது. "அறிவிக்கப்படாத மின் வெட்டு, தூக்கம், தண்ணீரின்றி தவிப்பு" என்ற தலைப்பில் "அடையாறு, வேளச்சேரி சுற்று வட்டாரங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால், பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தினமும், பகல், இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. சாலைப் பணி மற்றும் மின்மாற்றி அமைக்கும்போது ஏற்படும் கேபிள் பழுதால் மின் வெட்டு ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், எந்தப் பணியும் நடக்காத இடத்தில்கூட, மின்வெட்டு உள்ளது" என்று செய்தி வெளியிட்டு,ஜெயலலிதாவின் பேச்சு எவ்வளவு தவறான தகவல் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. நாளேட்டில் வந்துள்ள தகவல், "பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதைப் போல, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நாள்தோறும் நடக்கும் மின்வெட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான்!
2011ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே மக்களிடம் ஜெயலலிதா என்ன வாக்குறுதி கொடுத்தார் தெரியுமா? "மூன்றே மாதத்தில் மின் வெட்டை போக்குவேன்" என்று சொன்னார் ஜெயலலிதா. மூன்று மாதங்கள் அல்ல; முப்பது மாதங்கள் அல்ல; அறுபது மாதங்கள் ஓடிவிட்டன. மின்வெட்டு போகவும் இல்லை; சாகவும் இல்லை. இந்த ஐந்து வருடத்தில் மின்வெட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். சிறு மற்றும் குறுந் தொழில்கள் பாதிக்கப்பட்டன. பெரிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொழில் தொடங்கவே வராமல் அஞ்சி அலறி ஓடின.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, கோவை பகுதியில் உள்ள சிறு மற்றும் குறுந் தொழில்கள் மிக மோசமாக நலிவடைந்து, தொழிற்பேட்டைகளில் இருந்த தொழில் நிறுவனங்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டதை ஜெயலலிதா நேற்றைய தினம் மறந்து விட்டுப் பேசியிருக்கிறார். மறந்து விட்டுப் பேசினாரா? அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைத்து விட்டுப் பேசினாரா?
இன்றைய (11-4-2016) "தினமலர்" நாளேடு இரண்டாம் பக்கத்திலேயே - "விசாரணை வளையத்தில் தமிழ்நாடு மின் வாரியம் - நிலக்கரி இறக்குமதியில் கறுப்புப் பணம் பதுக்கல்" என்ற தலைப்பில் அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியிட் டுள்ளது. முதல் அமைச்சர் இப்படிப்பட்ட செய்திகளைப் படித்தாலே அவருக்கு எழுதிக் கொடுப்பதெல்லாம் எவ்வளவு உண்மைக்கு மாறான தகவல்கள் என்பதை அவராலேயே புரிந்து கொள்ள முடியும். ஜெயலலிதா தனது பேச்சின் துவக்கத்திலேயே 2011ஆம் ஆண்டு, அவர் வெளியிட்ட அ.தி.மு.க.வின் சார்பிலான தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார்.
2011ஆம் ஆண்டு அவர் வைத்த அ.தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சிலவற்றை மட்டும் இங்கே நினைவுப்படுத்துகிறேன்.
- அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் 4 வருடத்திற்குள் மும்முனை மின்சார இணைப்பு வழங்கி, மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி காணப்படும்.
- மின் திருட்டைத் தடுக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் "மின்சாரப் பாதுகாப்புப் படை" அமைக்கப்படும்
- 2012-க்குள் (இரு வருடங்களுக்குள்) 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில்,நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
- 2013-க்குள் பத்து 300 மெகாவாட் "சோலார் எனர்ஜி பார்க்" உருவாக்கப்பட்டு3000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
- காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும், அணு சக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 160 கிராமப் பஞ்சாயத்துகளில் 200 கிலோ வாட் உயிரிதிரல் (பையோ கேஸ்) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை. இதனால் கிராமப்புறங்களில் 64000 பேருக்கு வேலை வாய்ப்பு.
- வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம்.
- கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை.
- மின்சாரம் பற்றி மட்டும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் இவை.
இந்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் காற்றில் வேகமாகப் பறக்க விட்டுவிட்டு,ஐந்தாண்டு காலமாக "மின் மிகை மாநிலம்" "மின்வெட்டு நீக்கம்" என்ற பொய்யை; திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். இந்த மந்திரத்தால் மாங்காய் விழுந்து விடுமா?












Click it and Unblock the Notifications