ஜெ. ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டனவா?
"தேர்தல் அறிக்கையில் கூறியதையெல்லாம் நிறைவேற்றி விட்டோம்" என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சார முதல் கூட்டத்தில் முழங்கியதை விட, இன்னும் குரலை உயர்த்தி, சட்டப்பேரவையில் "2011 சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, அதற்கு மேலும் தமிழக மக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்" என்று முழங்கினார்.
இதற்கு தி.மு. கழகத்தின் சார்பில் அல்ல, "ஜூனியர் விகடன்" தனது 7-2-2016இதழில் "5 ஆண்டு கால ஆட்சி.....தேர்தல் வாக்குறுதிகள்..... நிறைவேற்றி விட்டாரா முதல்வர்?" என்ற தலைப்பிலேயே மூன்று பக்கங்களுக்கு பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி விரிவாக எழுதியிருக்கிறார்.

அதில் "புஸ்வாண வாக்குறுதிகள்" என்ற தலைப்பில், "சென்னை டு கன்னியாகுமரி கடலோர சாலைத் திட்டம் - தென் தமிழகத்தில் "ஏரோ பார்க்" - ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும் - திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம் - 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் - மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள் - விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண் டலங்கள் - பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள் - நீதிமன்றங்களில் தமிழ் மொழி - தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை - வன விலங்குகள் குடியிருப்பு - விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை - தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்கு வோம் - மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்" என்று பெட்டிச் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அந்த கட்டுரையின் துவக்கத்தில், "அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக ஜெயலலிதா சொன்னது,வெற்று வீர வசனம் மட்டுமே. 90 சதவிகித வாக்குறுதிகள் பஞ்சராகிப் போயின. தேர்தல் காலத்தில் கொளுத்திப் போட்ட கலர் மத்தாப்புகள் புஸ்வாணமாகி விட்டன" என்றும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்த ஒருசில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாசகங்களை அப்படியே கூறிவிட்டு, அதன் கதி என்ன என்பதையும் "ஜூனியர் விகடன்" எழுதியிருந்தது.
"இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம். இதற்காகச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்" என தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள். அந்தச் சிறப்பு திட்டம் எப்போது வரும் என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். "4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம், மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரின் மின்சாரப் பாதுகாப்புப் படை, மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும்" என்கிற வாக்குறுதிகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன. "கேபிள் டி.வி. அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்" என்றார்கள். மாதம் 70 ரூபாய் கட்டணத்தில் கேபிள் டி.வி. என நிறைவேற்றினார்கள். ஆனால், 70 ரூபாய் கட்டணம் எங்கே வசூலிக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. "மீனவர் பாதுகாப்புப்படை, 13 குளிர் சாதன மீன் பூங்காக்கள், நடுக்கடல் மீன் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக் கப்பல் பூங்கா எல்லாம் எப்போது வரும் என்பதை "மக்களால் நான். . . மக்களுக்காக நான்" எனச் சொல்லும் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும்.
"தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், கப்பல் கட்டும் துறைகள் ஊக்கு விக்கப்பட்டு செயல்படுத்தப்படும்; கப்பல் கட்டுமானத் துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்க நடவடிக்கைகள்; நிலம் கொடுக்கும் விவசாயிகளை பங்குதாரர்களாக மாற்றிச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்" எனத் தொழில் துறைக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின?
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முதலில் ஆதரித்து பிறகு ஜகா வாங்கியது, முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆட்சியின் அந்திமக் காலத்தில் நடத்தியது,இவை எல்லாமே தொழில் துறையின் மீது காட்டிய அக்கறைக்கு சாம்பிள்கள்.












Click it and Unblock the Notifications