தமிழகத்தின் 5 ஆண்டுகால சட்டம் ஒழுங்கு நிலைமை இதுதான்....
தயவுதாட்சண்யம் இல்லாமல் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றார்கள். 5ஆண்டுகளில் 9,948 கொலைகளும், ஒரு இலட்சம் கொள்ளைகளும் நடந் திருப்பது, சட்டம் ஒழுங்குக்குக் கிடைத்த நற்சான்றிதழ்.
அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீச்சு, ராமஜெயம் கொலை வழக்கு, தர்மபுரி, விழுப்புரம் சாதி வன்முறைகள், பரமக்குடி துப்பாக்கிச் சூடு என சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்தது.

"திரைப்படத் துறையினர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்" என்பதும் ஒரு வாக்குறுதி. விஸ்வரூபம், துப்பாக்கி, தலைவா ஆகிய படங்கள் தியேட்டரை எட்டிப் பார்ப்பதற்கு தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தானே தட்ட வேண்டியிருந்தது. தரமான படங்களுக்கு மானியம், சின்னத்திரை விருதுகள், அண்ணா, எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், சிவாஜி பெயர்களில் வழங்கப்படும் கலைத் துறை வித்தகர்கள் விருதுகளையும் மூட்டை கட்டி வைத்தார்கள்."
இப்படி ஜூ.வி. கட்டுரை மேலும் பல விபரங்களுடன் நீண்டு கொண்டே போகிறது. இந்த அழகில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா தனது முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக முழங்கியிருக்கிறார்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்த சில திட்டங்களைப் பற்றிய பட்டியலைத்தான்,அதுவும் ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியவற்றையெல்லாம் தேடியெடுத்து இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். முதலமைச்சர்ஜெயலலிதா, இந்த இதழைப் படித்திருந்தால், தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தக் கருத்தைப் பேசியிருக்க மாட்டார்; பொய்களைச் சொல்லத் துணிந்திருக்க மாட்டார்!
தேர்தல் அறிக்கையிலே அறிவித்த 54 திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாகசென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முழங்கிய ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 196 ரூபாய் மதிப்புள்ள 187 அறிவிப்புகளை பலத்த வரவேற்போடு அறிவித்தாரே, அந்த அறிவிப்புகளில்எத்தனை அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பது பற்றி வாயே திறக்கவில்லையே ஏன்?
அதைப் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் சார்பில் பல முறை கேட்டும் அரசு அதற்குத் தயாராக வில்லையே ஏன்? ஜெயலலிதா,தேர்தல் அறிக்கையிலே சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை; சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் சொன்ன திட்டங்களையும் நிறைவேற்றவில்லை; நிறைவேற்றாததைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.
ஜெயலலிதா, சொன்னது எதையும் செய்வதற்காகச் சொல்வதில்லை என்பதைத் தமிழக மக்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் ஜெயலலிதா, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை விட்டு விட்டு,உண்மை ஏதாவது கைவசம் இருந்தால், அதைப்பற்றிப் பேசட்டும்! இல்லாவிட்டால் "பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே" என்றுதான் பாடத் தோன்றும்.












Click it and Unblock the Notifications