என்னதான் நடக்கிறது பெங்களூரில்?... கருணாநிதி கேள்வி
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆகியோர் விமர்சனம் செய்து வரும் நிலையில் கர்நாடகா அரசு எப்போது மேல்முறையீடு செய்யும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு சம்பந்தமான மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாவிட்டால், அது மிகவும் தவறான சமிக்ஞையை நாட்டு மக்களுக்குத் தந்துவிடும் என்று கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கின் தற்போதைய நிலைமைகள் பற்றி இன்றைய ‘இந்து' ஆங்கில நாளேடு அரைப்பக்க அளவுக்குப் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளது.

ஆச்சார்யா அட்வைஸ்
"ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத்தவறினால், அது பெரிய இடங்களில் நிகழும் ஊழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவே கருதப்பட நேரிடும்" என்று கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆச்சார்யா விளக்கம்
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடையாணை கோர வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா பரிந்துரை செய்துள்ளார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதன் மூலம்; பொது நிர்வாகத்தில் ஊழலைச் சகித்துக் கொள்ளும் எண்ணம் கர்நாடக அரசுக்குக் கிஞ்சிற்றும் இல்லை என்ற உயர்ந்த செய்தியினை சமுதாயத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் ஆச்சார்யா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பரிந்துரை கடிதத்தில் ஆச்சார்யா
"ஜெயலலிதா வழக்கின் மேல் முறையீட்டில், கூட்டுத் தொகையில் கர்நாடக உயர்நீதிமன்றம் செய்த மாபெரும் தவறு, நீதி திசை திரும்புவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது" என்றும்; "விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை மாற்றி அமைத்திடும்போது, வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும், கொள்கைகளையும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அலட்சியப் படுத்திவிட்டார்" என்றும்; "உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தன்னுடைய தீர்ப்பில், ஜெயலலிதா தரப்பினருக்குச் சொந்தமான கட்டடங்கள், திருமணச் செலவுகள் போன்றவற்றைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான ஏனைய பல்வேறு சொத்துகளைப் பற்றி தீர்ப்பில் விவாதிக்கவே இல்லை" என்றும்; "கர்நாடக அரசு சமர்ப்பிக்கும் எழுத்து மூலமான வாதங்களைத் தீர்ப்பில் பரிசீலிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் அறிவுரையினையும், முழுமையாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பின்பற்றவில்லை" என்றும் பி.வி. ஆச்சார்யா கர்நாடக அரசுக்குத் தன்னுடைய பரிந்துரைக் கடிதத்தில் விளக்கியிருக்கிறார்.

ராஜீவ் தவான்
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் - ஜெயலலிதா தொடர்பான பல வழக்குகளில் அவருக்காக ஆஜரானவருமான ராஜீவ் தவான் அவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கியிருக்கும் தீர்ப்பு பற்றியும் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், கிருஷ்ணானந்த் வழக்கினை ஒப்பிட்டு ஜெயலலி தாவை விடுதலை செய்தது தவறு என்றும்; கிருஷ்ணானந்த் செய்த ஊழலைப் போல் ஆயிரம் மடங்குக்கு மேல் ஜெயலலிதா ஊழல் செய்துள்ளார் என்றும் ராஜீவ் தவான் கூறியிருக்கிறார்.

எத்தனை தவறுகள்..
மேலும் அந்தக் கட்டுரையில், கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கணக்கியல் தவறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர் ராஜீவ் தவான் இந்தத் தவறுகள் திருத்தப்படுமாயின், தீர்ப்பே மாறுபடும் என்றும் கூறியிருக்கிறார்.
பத்து சதவிகிதம் வரை வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணானந்த் வழக்கைக் காட்டி ஜெயலலிதாவை விடுவித்திருப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ள வழக்கறிஞர் தவான், கிருஷ்ணானந்த் வழக்கில் கூடுதலாக வைத்திருந்ததாகக் கூறப்பட்ட பணம் வெறும் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எப்படியெல்லாம் தவறு?
தவறுகள் நிறைந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலே, ஜெயலலிதாவின் கூடுதல் வருமானம் 28 மில்லியன் ரூபாய் என்றும், அதன் தற்போதைய மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கிறது என்றும் ராஜீவ் தவான் குறிப்பிட்டிருக்கின்றார்.
கிருஷ்ணானந்த் வழக்கின் சாராம்சங்கள் எதுவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் குவித்த ஜெயலலிதாவுக்குச் சிறிதும் பொருந்தாது என்றும் வழக்கறிஞர் ராஜீவ் தவான் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

சட்ட வல்லுநர்கள்..
இவ்வாறு ஆச்சார்யா மட்டுமல்ல; ராஜீவ் தவான் மட்டுமல்ல; இவர்களைப்போன்ற வேறு பல மூத்த வழக்கறிஞர்களும், சட்ட வல்லுநர்களும், பத்திரிகையாளர்களும், நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் - ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் உள்ள பிழைகள் மற்றும் சட்ட ரீதியான குறைபாடுகள் ஆகியவை பற்றி விரிவாகக் கருத்துகள் வெளியிட்டிருக்கின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் பிறகு, கர்நாடக அரசு, நீதி நெறிமுறைகளைக் காப்பதற்கும், லஞ்சம் - ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் போற்றி வளர்த்திட வேண்டிய கருத்துகளை எல்லோரு டைய மனதிலும் ஆழப் பதிய வைப்பதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப்பொறுத்திருந்து பார்ப்போம்!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications