அ.தி.மு.க. (ஜா) அணி Vs அ.தி.மு.க. (ஜெ)
அதன் பிறகு அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும் திரு. கே.கே.எஸ்.எஸ். ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிறவரை, "இன்றைக்கு மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்"" என்று சொல்லிக் கொண்டே வந்தார்." இவ்வாறு திருநாவுக்கரசரே கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க. என்ற ஒரு அமைப்பு பேரவையில் நுழைந்த பிறகு தான், அதுவும் குறிப்பாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான், சட்டசபையில் அராஜகம் - அநாகரீகம் என்பவை நுழைந்தன என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகையாளர்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே பிரச்சினை எழுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. (ஜா) அணி என்றும், அ.தி.மு.க. (ஜெ) அணி என்றும் பிரிந்து பேரவையிலே 28-1-1988 அன்று, எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்த போது; எதிர் அணியான ஜெயலலிதா அம்மையார் அணியினர், கலவரத்தை ஆரம்பித்து, சட்டப்பேரவையையே ரணகளமாக்கி, பேரவைக்குள் காவல்துறைத் தலைவர் தேவாரம் தலைமையிலே போலீசார் நுழைந்து தாக்குகின்ற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய், ஜெயலலிதா எதிர்பார்த்ததைப் போலவே, அதை வைத்து ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
அப்போது அ.தி.மு.க.வினர் அங்காடித் தகராறு போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட சம்பவங்கள் மறந்தா விட்டன? பேசுவதற்காகக் கொடுக்கப்பட்ட "மைக்"குகளைப் பிடுங்கி, ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்கிய சம்பவங்கள் தெரியாதா? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளிலே "மைக்"குகளை ஏந்திக் கொண்டு ஏதோ போர்க் களத்திலே வாளேந்தி நடந்து வரும் வீரர்களைப் (!) போல, வெற்றி நடை நடந்து வெளியே வந்த புகைப்படங்கள் எல்லாம் பழைய ஏடுகளிலே இன்றைக்கும் பார்க்கலாம்! அவையின் நாகரிகம் - பண்பாடு என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்ட இந்தச் சம்பவம் பன்னீர்செல்வத்திற்கு தெரியாதா?












Click it and Unblock the Notifications