ஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என மீண்டும் கருணாநிதி அறிவிக்க காரணம் இதுதானா?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் ரீதியான கருத்துக்கள் எப்போதுமே பல பொருள்படும் வகையில்தான் இருக்கும். இதை அவரது தமிழ் அறிவு அல்லது அரசியல் சாமர்த்தியம் என்று அழைக்கிறார்கள் ஆதரவாளர்கள்.
இரு பொருள்படும் படியான சொற்களை பயன்படுத்தும்போது, சிக்கல் தருணங்களில் அந்த வார்த்தையை வேறு பொருளில் அர்த்தம் கூறி, தப்பித்துவிட முடியும். இந்த சாணக்கியத்தனத்தை கருணாநிதி பல தருணங்களில் செய்துள்ளார்.
இந்த நிலையில்தான், தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என கூறியுள்ள வார்த்தையும், இரு பொருளில் விவாதிக்கப்படுகிறது.

தலைவர் பதவிக்கு ஸ்டாலின்
63 வயதாகும் ஸ்டாலின், திமுகவின் தலைவராக வேண்டிய தருணம் இது என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகம் முழுக்க ஸ்டாலின் பயணம் மேற்கொண்டபோதே, ஸ்டாலினை திமுக தலைவராக கருணாநிதி அறிவிப்பார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் தேர்தலும் முடிந்தாகிவிட்ட பிறகும், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

அரசியல் வாரிசு
இந்நிலையில்தான், கருணாநிதி தற்போது வார இதழுக்கு அளித்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என அவர் கூறியுள்ளார். சாதாரணமாக பார்க்கும்போது, அழகிரியை, கனிமொழியை விட ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து கருணாநிதி, அவரை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தோன்றும். ஆனால், ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு, இந்த வார்த்தை மிகவும் ஆழம் பொதிந்ததாக தெரிகிறது.

தலைவர் கருணாநிதிதான்
சில ஆதரவாளர்களிடம் பேசியபோது அவர்கள் கூறிய கருத்து இதுதான்: ஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என கருணாநிதி கூறியிருப்பதன் மூலம், திமுக தலைமை பதவியை தான்தான் வைத்துக்கொள்ளப்போவதையே மறைமுகமாக மீண்டும் அறிவித்துள்ளார் கருணாநிதி. இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையாக தனக்கு ஏதாவது நேரும்வரை கட்சியின் தலைவர் தாம்தான் என கருணாநிதி கூறியிருந்ததை அவர்கள் நினைவுகூர்கிறார்கள்.

புது தகவல் இல்லை
ஸ்டாலினை அரசியல் வாரிசாக கருணாநிதி அறிவித்ததில் அதிகம் மகிழ்ச்சியடையவோ, புதிதாக தகவலை தெரிந்து கொள்ளவோ எதுவும் இல்லை என்கிறார்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள். இது ஏற்கனவே தெரிந்ததுதான் எனவும், ஆனால் தலைமை தொடர்ந்து கருணாநிதியிடம்தான் இருக்கும் என்பதைத்தான் இப்போதைய தகவலாக தாங்கள் பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவித்த விஷயம்
2011ல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு என்பதில் எந்த கேள்விக்குறிக்கும் இடமில்லை என கூறியவர் கருணாநிதி. அதேபோல 2013 ஜனவரி மாதம், கட்சி தொண்டர்களிடம் பேசியபோது, எனது இறுதி மூச்சு இருக்கும்வரை தமிழர்களுக்காக உழைப்பேன், எனக்கு பிறகு யார் என்ற கேள்வி வருமானால், அதற்கு பதில் ஸ்டாலின் என கூறியிருந்தார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications