“சூரியனுக்கு முன் உதிக்கும் கதிரவன்”... கருணாநிதியின் 'ஒரு நாள்' இது தான்!
உடல் உபாதைகளால் முடங்காதவரை திமுக தலைவர் கருணாநிதியின் உழைப்பு அபரிமிதமானது.
சென்னை: சுறுசுறுப்புக்கு பெயர் போன கருணாநிதி காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை என்னென்ன செய்வார் என்பதை தெரிந்து கொள்வோம்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியில் உயிர் இன்று பிரிந்தது. அன்பு உடன்பிறப்புகளான திமுக தொண்டர்களுக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
அகவகை 95-ஐ எட்டினாலுல் ஒரு நாளும் சோர்ந்து உட்காராதவர் கருணாநிதி. இதனாலேயே அவரை சுறுசுறுப்பின் மறுபெயர் கருணாநிதி என அழைப்பவர்களும் உண்டு. தமது வாழ்நாள் முழுவதும் இதை பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்தவர் அவர்.
இப்படி புகழும் அளவுக்கு அவர் அப்படி என்ன கடைபிடித்தார் என்று தானே கேட்கிறீர்கள். இதோ அவரது ஒரு நாள் எப்படி போகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரிய உதயத்துக்கு முன் உதிக்கும் சூரியன்
திமுக தலைவர் கருணாநிதியின் பொழுது அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் அவர், பல் துலக்கிவிட்டு சூடாக ஒரு காப்பி அருந்துவார். சூரிய உதயத்துக்கு முன் எழுந்திருப்பவர்களுக்கு, ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு சமம் என்பார் கருணாநிதி.

வாசிப்பு தான் முதன்மை பணி
முரசொலி முதல் நமது எம்.ஜி.ஆர். வரை தி இந்து முதல் இபிடபிய்யூ வலை எல்லாப் பத்திரிகைகளிளும், ஒரு வேக ஆழ்ந்த வாசிப்பு. கட்சியினர், அதிகாரிகள், தொடர்பான விமர்சனங்கள், குறைகள், வெளியாகியிருந்தால் கையோடு அழைத்து விளக்கம் கேட்பார். காலையில் கருணாநிதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது என்றால், அவர்கள் சம்பந்தமாகப் பத்திரிக்கையில் ஏதோ செய்தி வந்திருக்கிறது, அர்ச்சனை நிச்சயம் என்பது தீர்க்கமான சமிக்ஞை.

உடற்பயிற்சி:
இவற்றை எல்லாம் முடித்துவிட்டு, தினமும் நடை பயிற்சி செய்ய தவறியதில்லை அவர். ஏதாவது மழை நாளாக இருந்தால், வீட்டிலேயே யோகாசனம் செய்வார். குளியளுக்கு பின் காலை உணவு. பெரும்பாலும் இரண்டு இட்லி. தக்காளிச் சட்னி பிடித்தமான சைடிஷ். இதையடுத்து காலை படித்த செய்திகளுக்கான பதில் அறிக்கை. கூடவே உடன்பிறப்புகளுக்க கடிதமும்.

சந்திப்பு:
வாசிப்பு, எழுத்து, சாப்பாடு என பெரும்பாலும் காலைப் பொழுதுகள் எல்லாமே அவரது சிறிய படுக்கையறையில் தான். சமயங்களில் அந்த அறையிலேயே கட்சி முன்னோடிகளை அவர் சந்திப்பதும் உண்டு. அந்த அறையில் இருந்து வெளியில் வந்தால், சிறிய நடைபாதை இருக்கும் அதில் தான் தன்னைப் பார்க்க வரும் முக்கியஸ்தர்களைச் சந்திப்பார்.

தொடர் கண்காணிப்பு:
காலையிலேயே சென்று விட்டால் கருணாநிதியை வீட்டில் பார்த்து தங்கள் கோரிக்கைகளை நேரில் மனுவாக அளிப்பது பொதுமக்களுக்கு எளிதான ஒன்று. அனைத்து மனுக்களையும் வாங்கிக் கொள்வதோடு, தொடர்ந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிப்பார்.

தலைமைச் செயலகம்:
இதையடுத்து முதலமைச்சராக இருந்த போது நேராக தலைமைச் செயலகம் சென்று விடுவார். மற்ற காலங்களில் வீட்டில் இருந்து புறப்படும் கருணாநிதி நேராக முரசொலி அலுவலகம் செல்வது வழக்கம். அங்கு பத்திரிகைகளில் வர வேண்டிய செய்திகள் குறித்து ஆலோசித்து விட்டு, பின்னர் மற்ற வேலைகளை கவனிப்பார். இதற்கிடையே, கல்யாண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் தவறாது கலந்து கொள்வார்.

சிஐடி காலனியில் மதிய உணவு:
மதிய சாப்பாட்டிற்கு சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டிற்கு சென்று விடுவார். அசைவப் பிரியரான அவர், பெரும்பாலும் மதிய நேரத்தில் விறால் மீன், கறி ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவத்திற்கு மாறினார். ஆனால், எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

மாலை நாளிதழ்கள் வாசிப்பு:
மதிய உணவுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடும் வழக்கம் கருணாநிதிக்கு உண்டு. பின்னர் எழுந்ததும் ஒரு காபி சாப்பிட்டு விட்டு, மாலை நாளிதழ்களை ஒரு பார்வை பார்ப்பார். அதனைத் தொடர்ந்து அறிவாலயம் செல்வார். அங்கு தொண்டர்கள் மற்றும் கட்சியினரைச் சந்தித்து உரையாடுவார்.

எழுத்தும், வாசிப்பும்:
இரவு மீண்டும் கோபாலபுரம் வீடு திரும்பி இரவு உணவைச் சாப்பிடுவார். அதன்பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு, பின்னர் தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடுவார். அதனைத் தொடர்ந்து தனது படுக்கையறைக்குச் சென்று புத்தகங்கள் வாசித்து விட்டு, இரவு 12 மணியளவில் உறங்கச் செல்வார். சமயங்களில் வாசிப்பு, எழுத்து என அவரது தூக்கம் 12 மணியையும் தாண்டும். இரவில் எவ்வளவு தாமதமாக உறங்கச் சென்றாலும், அதிகாலை 4.30 மணிக்கே மீண்டும் உதய சூரியன் உதித்து விடும் அவருக்கு.












Click it and Unblock the Notifications