கருணாநிதியின் மூத்த சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் காலமானார்.. ராமதாஸ் இரங்கல்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். அன்னாருக்கு வயது 98.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களின் பாட்டிதான் சண்முகசுந்தரத்தம்மாள். 98 வயதான சுந்தரத்தம்மாள் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல் நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார்.

நேரில் அஞ்சலி:
இந்நிலையில் இன்று அவர் காலமானார். தனது மூத்த சகோதரியின் மரணச் செய்தியால் திமுக தலைவர் கருணாநிதி வேதனை அடைந்துள்ளார். மேலும், அவரது வீட்டுக்கு விரைந்து சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் ஸ்டாலினும் சுந்தரத்தம்மாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராமதாஸ் இரங்கல்:
சண்முகசுந்தரத்தம்மாள் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :-
தி.மு.க. தலைவர் கலைஞரின் மூத்த சகோதரியும், மறைந்த முரசொலி மாறனின் தாயாருமான சண்முகசுந்தரத்தம்மாள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும், துயரமும் அடைந்தேன்.
கலைஞர் மீது சண்முகசுந்தரத்தம்மாள் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தவர். கலைஞரின் தாயாருக்கு இணையாக பாசம் காட்டி வளர்த்தவர். அதேபோல், கலைஞரும் சண்முகசுந்தரத் தம்மாள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததுடன், அவரது சொல்லை மீறாத அளவுக்கு மரியாதை கொண்டிருந்தார். சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் மீது கொண்டிருந்த பாசம் காரணமாக, அவரது புதல்வர் முரசொலி மாறனை கலைஞர்தான் அன்புகாட்டி வளர்த்தார்.
நெருக்கடியான காலகட்டங்களில் குடும்ப வழிகாட்டியாக திகழ்ந்த மூத்த சகோதரியின் மறைவு, கலைஞருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கலைஞரின் சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.
சண்முகசுந்தரத்தம்மாளை இழந்து வாடும் தி.மு.க. தலைவர் கலைஞருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications