'பவானிசிங்'கேதான் வேணும்... ஜெ. தரப்பு கோருவது ஏன் தெரியுமா? கருணாநிதி சொல்லும் விளக்கம்...
சென்னை: ஜெயலலிதா தரப்பு கொடுத்த காசுக்கு சரியான பிரதிபலனை எதிர்பார்ப்பதால்தான் பவானிசிங்கே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டும் என்று வாதிடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட 'கேள்வி பதில்' வடிவிலான அறிக்கை விவரம்:
கேள்வி: ஜெயலலிதாவை எதிர்த்து வாதாட வேண்டிய பவானிசிங் அப்படி எதிர்த்து வாதாடாதது பல முறை நீதிபதிகளாலேயே சுட்டிக் காட்டப்பட்ட பிறகும், அவரே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்று குற்றவாளிகளான ஜெயலலிதா தரப்பினரும், பவானிசிங் தரப்பினரும் வாதாடுகிறார்களே, அதற்கு என்னதான் காரணம்?
பதில்: கொடுத்த காசுக்கு சரியான பிரதிபலனை எதிர்பார்ப்பதும், வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டுமென்று எண்ணுவதும் சகஜம்தானே?

கழுதைக்கு வாக்கப்பட்ட பின்..
கேள்வி : காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை, தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினர்கள் தாக்கியது பற்றி ஏடுகளில் செய்தி வந்துள்ளதே?
பதில்: நடப்பது அ.தி.மு.க. ஆட்சி. அதன் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அவர்கள் ஆட்சியில் காவல் நிலையத்திலே என்ன, தலைமைச் செயலகத்திற்கேகூட காதல் ஜோடியைக் கொண்டு வந்து அடிப்பார்கள்! பார்த்துக் கொண்டிருந்து தான் ஆக வேண்டும்!
"கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட பிறகு உதைக்குப் பயப்படலாமா" என்ற பழமொழியைக் கேட்டதில்லையா?

நெல் கலப்படம்
கேள்வி: நெல்லில் செங்கல் தூள், சவுடு மண் கலந்த விவகாரத்தில் தமிழக உணவு அமைச்ரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருக்கிறார்களே?
பதில்: பால் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக பால் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்; வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அந்தத் துறையின் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டு விட்டார்;
அந்தச் சம்பவங்களுக்கு அடுத்து, தற்போது அவற்றைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூட்டை களைக் கொண்டு வந்து, செங்கல் தூள், சவுடு மண் ஆகியவற்றைக் கலந்து அனுப்பி வைத்த மோசடிச் சம்பவம் பற்றிய செய்தி தொடர்ந்து வந்து கொண் டிருக்கின்றது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங் கிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதுபோலவே மின் துறையில் டெண்டர் விட்டதில் நடைபெற்ற ஊழலும் நடந்துள்ளது. இவ்வாறு ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண் டிருந்த போதிலும், இதற்கெல்லாம் மூல காரணம் யார் என்பதும்; அமைச்சர்கள் தங்களுக்காக தவறுகளைச் செய்து பொருள்களைச் சேர்த்தார்களா? அல்லது வேறு யாருக்காவது கப்பம் கட்டுவதற்காகத் தொகையைக் குவித்தார்களா என்ற விவரமும் உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? அதற்குத்தான் இந்த விவகாரங்களைப் பற்றியெல்லாம் முழுமையாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன!

அக்ரி விவகாரம்
கேள்வி : அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவலைத்தான்; தற்கொலை செய்து கொண்டு இறந்த வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமார சாமியிடம் கூறினேன் என்று கைதான பொறியாளர் செந்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?
பதில்: இது மாட்டிக் கொண்டு, கைது செய்யப்பட்ட ஒரு அதிகாரியின் வாக்குமூலம். தமிழக அரசில் அந்தந்த துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மிரட்டலை மீற முடியாமல், எந்தெந்த உயர்மட்ட அதிகாரிகள், தங்களுக்குக் கீழே பணி யாற்றுகின்ற அதிகாரிகளை அன்றாடம் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? வெளிவந் துள்ளது ஒரு பிரச்சினைதான். வெளி வராமல் இருப்பதோ ஏராளமான சம்பவங்கள்.
ஒரு அதிகாரி தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டார். ஆனால் இன்னும் எத்தனை அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டு சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் இந்த ஆட்சியில் வேதனை களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ? தற்போது சிறையிலே உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம், தனது நடவடிக்கை அனைத்துமே அம்மாவுக்குத் தெரியும் என்று கூறி, அந்தப் பேட்டி ஏடுகளிலே வெளிவந் திருக்கிறது. எனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண் துறை அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதும் அம்மாவுக்குத் தெரியுமா? தலைமைப் பொறியாளர் கொடுத்த வாக்குமூலத்தில், ஏற்கனவே வேளாண் துறையில் காலியாக இருந்த 119 பணி இடங்களைப் பூர்த்தி செய்ய 2 கோடி ரூபாய் வரை வசூலித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்த தாகவும் தெரிவித்திருக்கிறாராம். இதுபற்றி உண்மை முழுவதுமாகத் தெரியத்தான் சி.பி.ஐ. வேண்டுமென்று அனைவரும் கேட்கிறார்கள்!

அமைச்சர் குடோனில் லஞ்சப் பணம்..!
கேள்வி: அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் குடோனில் லஞ்சப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே?
பதில்: ஆமாம், தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளின் மூலம் மாதம் ஒன்றுக்கு 400 கோடி ரூபாய் 500 கோடி ரூபாய் வரை லஞ்சப் பணமாக வசூல் செய்கிறார்கள் என்றும், இத்தகைய லஞ்சப் பணம் சேலம் ஐந்து ரோடு பகுதியில், கண்ணகி தெருவில், அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்படு கிறது என்றும், இந்தப் பணத்தை ஒரு டி.எஸ்.பி., நான்கு போலீசார் பாதுகாப்புடன் அங்கே கொண்டு சேர்க்கப்படுகிறது என்றும், சம்பந்தப் பட்ட குடோனில் வருமான வரித் துறையினரும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் உடனடியாகச் சோதனையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இதற்கான ஆவணங்களை வெளியிடுவேன் என்றும் பொறுப்பான அரசியல் கட்சித் தலைவர் தம்பி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றஞ்சாட்டியிருக் கிறார். இதுகுறித்து வழக்கு தொடுக்கப்பட் டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கு முடிந்து உண்மையைத் தெரிந்து கொள்ள நாட்டுமக்கள் காத்திருக்கிறார்கள்.

ஆசிரியர் ஊதியம்
கேள்வி: தற்போது ப்ளஸ் 2 கேள்வித் தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களுக்குத் தரப்படும் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: இதற்கான கோரிக்கை கடந்த இரண்டாண்டு காலமாகவே இருந்து வருகிறது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு ப்ளஸ் 2 விடைத்தாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் ரூ.7.50 வழங்கப்படுகிறதாம். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் விடைத் தாள் ஒன்றுக்கு 20 ரூபாயும், கர்நாடகாவில் 15 ரூபாயும் ஊதியமாகத் தரப்படு கிறதாம். அவர்களுடைய சங்கத்தின் சார்பில் இந்தக் கோரிக்கை கடந்த இரண்டாண்டு காலமாக தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட போதிலும், வழக்கம் போல இதுவும் நிலுவையிலே இருக்கிறதாம்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications