Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடன்குடி மின் திட்டம் பற்றி அமைச்சர் 'நத்தம்' உரைத்த பொய்கள்: பட்டியலிடும் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடன்குடி மின் திட்டம் பற்றி மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஏராளமான பொய்களை கூறியுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

Karunanidhi slams Natham Viswanathan over Udangudi project

தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின் திட்டப் பணிகள் 2007 முதல் 2011வரை நிறைவேற எந்தப் பணியையும் செய்யவில்லை என்று தமிழகச் சட்டசபையில் மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மிகவும் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் தாமதம் என்று கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்வதை விட்டு விட்டு, "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப்போல" தி.மு. கழக ஆட்சி மீது குற்றஞ்சாட்டுவது என்ன நியாயம்?

இப்போது,நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள்? ஏன் ரத்து செய்தார்கள்? என்பதற்குப் பதில் கேட்டால், தி.மு. கழக ஆட்சியில் எந்தப் பணியையும் நிறைவேற்றவில்லை என்பது தானா பதில்? அந்தப் பதிலாவது உண்மையானது தானா?

இவருடைய கேள்விக்கு 8-4-2015 தேதிய ஜு.வி. இதழிலேயே பதில் எழுதப்பட்டுள்ளது. அதாவது, "திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ஒரு வருவாய் ஆய்வாளரைக் கூட தி.மு.க. அரசாங்கம் நியமிக்கவில்லை.

சுற்றுச் சூழல் அனுமதியைப் பெறவில்லை. நிதி ஆதாரத்தைத் திரட்டவில்லை என்று மின் துறை அமைச்சர், நத்தம் விசுவநாதன் பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் பெல் நிறுவனமும், மின்வாரியமும் இணைந்து, "உடன்குடி மின் கழகம்"என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கின.

மார்ச் 2011ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகம் சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையைத் தந்துள்ளது. அந்த அறிக்கை மொத்தம் 112 பக்கங்களைக் கொண்டது. அதில் அண்ணா பல்கலைக் கழகம், மிக மிகத் தெளிவாக உடன்குடி மின் திட்டத்துக்காக 939 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

உடன்குடியில் சுற்றுச்சுவர் அமைத்து, நிலத்தை ஆய்வு செய்யும் பணியை ஏற்றுக் கொண்டிருந்த எஸ்.ஆர்.சி. புராஜெக்ட்ஸ் நிறுவனம், 2012 மே மாதம் தனது வேலையை முடித்து விட்டது. இவை எதுவும் நத்தம் விஸ்வநாதன் பேச்சில் இல்லை" என்று ஜு. வி. குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், தமிழகச் சட்டப் பேரவையில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது. பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொன்னால், அதற்கு என்ன தண்டனை?

டெண்டர் கோரிய நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், அதன் தகுதிகளைப் பரிசீலிக்க காலதாமதமானதாக மின் துறை அமைச்சர் பேரவையில் சொல்லியிருக்கிறார். ஆனால் மின்வாரிய ஆவணங்களின்படி 11-11-2013 அன்று கூடிய மின்வாரிய தொழில் நுட்பக் குழு, பெல் நிறுவனம் மற்றும் ஒரு சீன நிறுவனத்தின் டெண்டர்கள் தொழில் நுட்ப ரீதியாக தகுதியானவை என்றும், மற்ற இரண்டு சீன நிறுவனங்களின் டெண்டர்களும் தகுதியற்றவை என்றும் முடிவெடுத்துள்ளன.

மின்வாரியத்தின் எந்தக் கோப்புகளிலும் அமைச்சர் சொல்வது போல வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதால், அவற்றைப் பரிசீலிக்க தாமதமானது என்று குறிப்பிடப்படவில்லை என்றும் ஜு.வி. இதழ், அமைச்சரின் பொய்யை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பொய்களுக்கெல்லாம் மின் துறை அமைச்சரின் விளக்கம் என்ன?

மின் துறை அமைச்சரின் அடுத்த பொய்; "இறுதியில் பெல் மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்கள் ஏற்கப்பட்டன. அந்த நிலையில், பெல் நிறுவனத் துக்கு ஏற்கனவே ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கினால் டெண்டரை இறுதி செய்து, நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது" என்று நத்தம் விசுவ நாதன் பேரவையில்கூறினார்.

பெல் நிறுவனத்துக்கு எதிராக சீன நிறுவனம் வழக்கு தொடுத்தது, உடன்குடி அனல் மின் திட்டத்துக்காக அல்ல; எண்ணூர் அனல் மின் நிலைய டெண்டரில், பெல் நிறுவனத்தின் விலைப் புள்ளி நிராகரிக்கப்பட வேண்டுமென்று தான் வழக்கு தொடுத்திருந்தது. மேலும் இந்த வழக்கு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அமைச்சர் அவையில் சொன்னார் என்றும், நீதியரசர் ராமசுப்ரமணியம் அவர்கள் முன்பு விசாரணை நடைபெற்று, அதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே அமைச்சர் அவையில் உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்திருக்கிறார் என்றும் ஜு.வி. எழுதியிருக்கின்றது.

அமைச்சரின் அடுத்த பொய்; நத்தம் விசுவநாதன் பேரவையில் பேசும் போது, "பெல் மற்றும் சீன நிறுவனத்தின் திட்டம் மற்றும் விலைப் புள்ளிகளைப் பரிசீலித்து அறிக்கை அளிக்க ஜெர்மனி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதை ஆய்வு செய்த அந்த நிறுவனம், இரண்டிலும் குறைகள் உள்ளன.

அவற்றைச் சீர் செய்த பிறகு, டெண்டரை ஏற்கும் முடிவை, தமிழக அரசின் மின் வாரியமே முடிவு செய்து கொள்ளட்டும் என்று அந்த நிறுவனம் ஆலோசனை சொன்னது" என்றார்.

அவை நடவடிக்கை குறிப்பில் அமைச்சரின் பேச்சு இதனை உறுதிப்படுத்தும். ஆனால் ஜெர்மன் நிறுவனம் கொடுத்த அறிக்கையில், "இரண்டு டெண்டர்களிலும் குறை உள்ளது. ஆனால், சீன நிறுவனத்தின் விலைப் புள்ளியே குறைவானது. டெண்டரை வழங்குவதற்கு பெல் நிறுவனத்தை விட சீன நிறுவனத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்" என்று கூறப் பட்டிருந்ததாகவும் ஜு.வி. எழுதியுள்ளது.

சீன நிறுவனத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் நிறுவனம் கொடுத்த ஆலோசனையை அமைச்சர் பேரவையில் மறைத்தது ஏன்? "ஒரு பொய்யை மறைக்க, ஒன்பது பொய்கள்" என்பதற்கு மின் துறை அமைச்சரின் பொய்களே எடுத்துக் காட்டாகும்.

பேரவையில் மின் துறை அமைச்சர் கூறிய வரிசையான இந்தப் பொய்யான தகவல்களுக்கு அ.தி.மு.க. அரசும், அந்தக் கட்சியின் தலைவியும், பதவியிலே உள்ள முதல் அமைச்சரும் அளிக்கப் போகின்ற பதில் என்ன?'

இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+