நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான் ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் பேச்சு : கருணாநிதி சாடல் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான் ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் பேச்சு என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகரிலும், அதனை யொட்டிய மாவட்டங்களிலும், மேலும் கடலூர், தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும், காவேரி டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து, சென்னை மாநகரில் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகக் கோளாறு காரணமாக வெள்ளமும் ஏற்பட்டு, சுமார் 700 பேர் பலியாகியிருக்கிறார்கள். இறந்தோரின் எண்ணிக்கையே இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. கோடிக் கணக்கான ரூபாய் அளவுக்கு மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

karunanidhi statement about jayalalitha whatsapp talk

நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான்

இலட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து நிற்கிறார்கள். இந்தத் துயரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், குறிப்பாக எந்தக் கட்சியிலும் இல்லாத இளைஞர்களும் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, "வாட்ஸ்-அப்" மூலமாக "அசரீரியாகப்" பேசுகிறார். ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான்!

"வாட்ஸ்-அப்" மூலம் உருக்கமாகப் பேசியிருக்கிறாராம்

தமிழகத்தின் தலைநகரமே தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்? மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த எத்தனை முகாம்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்? எத்தனை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்? மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டங்களில் எந்தெந்த ஊர்களுக்குச் சென்று தவித்துக் கொண்டிருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்? பத்திரிகையாளர்களை எத்தனை முறை சந்தித்து அரசுப் பணிகளைப் பற்றிய விளக்கங்களை அளித்தார்? எத்தனை முறை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, அமைச்சர்களோடு வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி கலந்தாலோசனை செய்தார்?

எந்தெந்த எதிர்க் கட்சித் தலைவர்களை, குறைந்தபட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினார்? எத்தனை முறை டெல்லி சென்று பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் சந்தித்து உதவி கோரினார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுக்கடுக்காக அரசின் மீது சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எத்தனை முறை பதில்களை அளித்தார்? எதற்கும் "இல்லை" என்பதுதான் பதில்! இந்த இலட்சணத் தில்தான் பதினைந்து நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா "வாட்ஸ்-அப்" மூலம் உருக்கமாகப் பேசியிருக்கிறாராம்.

என்ன பேசியிருக்கிறார்?

"வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்து கிறேன்" - சொல்வது யார்? முதலமைச்சர் ஜெயலலிதா! அதுமட்டுமா? "உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான்" என்றெல்லாம் முதலமைச்சர் அந்தப் பேச்சில் சொல்லியிருக்கிறார். மக்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக, அவர்கள் தங்கியிருந்த முகாம்களிலே சென்று பார்த்தாரா முதலமைச்சர்? அவருக்கு என்று தனி வாழ்க்கை கிடையாதாம்! "அம்மா என்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் ஜெயலலிதா உண்மைதான்.

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள், அம்மா விதைகள், அம்மா பேபி-கேர் கிட், அம்மா சிமெண்ட், அம்மா முழு உடல் பரிசோதனை, அம்மா மாளிகை, அம்மா இலக்கிய விருது, அம்மா விடுதிகள், அம்மா இன்சூரன்ஸ் திட்டம், அம்மா வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பயிற்சித் திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா சிறுவர் பூங்காக்கள், அம்மா பயிற்சி வகுப்புகள், அம்மா மாணவர் ஊக்குவிப்புத் திட்டம், அம்மா அரசுப் பணித் திட்டம், அம்மா பணி பாராட்டும் திட்டம், அம்மா குடை வழங்கும் திட்டம் - என்று இப்படியெல்லாம் பெயர் வைத்துக் கொள்வதற்காகத்தான் தன்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

எப்படிப்பட்ட உழைப்பு?

எத்தனை மணி நேர உழைப்பு? தனக்கென்று சுயநலம் அறவே கிடையாதாம்; தன் பெயராலும், தன் வீட்டிலேயே உடன் வாழ்ந்து வருபவர்கள் பெயராலும், பினாமிகள் பெயராலும் உள்ள போயஸ் தோட்டம், சிறுதாவூர், கொடநாடு, பல கோடி ரூபாயில் பல்வேறு திரையரங்குகள், மிடாஸ் மதுபானத் தொழிற்சாலை போன்றவை எல்லாம் பொது நலத்தின் அடையாளங்களா? எப்படியோ, 15 நாட்களாக வாய் திறக்காத முதல் அமைச்சர், வாட்ஸ்-அப் மூலமாக வாய் திறந்து விட்டார். பாதிக்கப்பட்ட, பரிதாபத்திற்குரிய தமிழ்நாட்டு மக்களே, முதல் அமைச்சர் ஜெயலலிதா "வாட்ஸ் அப்" மூலமாக உருக்கமாகப் பேசி விட்டார்! மழை வெள்ளத் துன்பத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக உறுதி கூறி விட்டார்! பின்னர் என்ன? கேழ்வரகில் நெய் வடிகிறதாம், கேட்பவர்களே, நம்புங்கள், நம்ப முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+