கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரம் சாப்பிட்டதுதான் என அவரது குடும்ப வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெயால் வந்த அஜீரணம்தான் காரணம் என அவரது குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் திமுக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
92 வயதாகும் கருணாநிதிக்கு முதுமையால் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் கோபாலபுரம் வீட்டில்தான் இருந்து வருகிறார்.
எண்ணெய் பலகாரம்
இதனால் மாலையில் ராஜாத்தி அம்மாளும் சென்னையில் இருக்கும் போது காலையிலும் மாலையிலும் கனிமொழியும் கருணாநிதியை போய் பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி எண்ணெய் பலகாரம் ஒன்றை சாப்பிட்டிருக்கிறார்.
வயிற்றுப் போக்கு...
அவருக்கு அது சேராமல் போய் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம்... இதனால் மருத்துவர்கள் புதிய மாத்திரைகள் கொடுத்திருக்கின்றனர்.
புதிய மாத்திரையால் அலர்ஜி
இந்த புதிய மாத்திரைதான் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாகிவிட்டதாம். உடனடியாக மருத்துவர்கள் கருணாநிதி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுக அறிக்கை
கருணாநிதி வீட்டுக்கு மருத்துவர்கள் வந்து சென்ற தகவல் தெரிந்து திமுக மூத்த தலைவர்கள் கோபாலபுரத்துக்கு படையெடுத்திருக்கின்றனர். இதனால்தான் திமுக தலைமை கழகம் சார்பில் கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் யாரும் அவரை பார்க்க வரவேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட நேரிட்டதாம்.