தியாகு உண்ணாவிரதத்தை கைவிட கருணாநிதி வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.
தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.
அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications