தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
கேள்வி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது நின்ற பாடில்லையே?
பதில்: அது பற்றி நமது முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டார். நாகை தெற்கு மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 17 மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளுடன் நான் திருவாரூர் தொகுதியில் நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்குச் சென்ற நாளில், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதற்கு முன்பே ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே குறைந்த எண்ணிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து, இலங்கை அரசு ஆலோசித்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது.
தமிழகம் - இலங்கை மீனவர் பிரச்சினையில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்த லைசென்ஸ் முறை வழி வகுக்கும் என்று மீனவர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.