“யாதும் ஊரே யாவரும் கேளிர்” கனவுலகத்தை நிஜமாக்கிய டுவிட்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து: கருணாநிதி
சென்னை: இளைஞர்களாக இணைந்து உருவாக்கிய இணைய உலகமாகிய டுவிட்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் கருணாநிதி.
மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது இணையம். பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அரசு வேலைகள் உட்பட பல்வேறு பணிகளுக்கு இணையம் மக்களுக்கு உதவுகிறது.
அதிலும், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் கருத்துக்களைப் பகிர்வதற்காக மட்டுமல்லாமல், தங்களது பழைய உறவுகளையும் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அந்தவகையில் வரும் 21ம் தேதி தனது 8வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறது டுவிட்டர்.
இந்நிலையில், முன்கூட்டியே டுவிட்டருக்கு தனது வாழ்த்துச் செய்தியை பேஸ்புக் வாயிலாகத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அதில் அவர் கூறியிருப்பதாவது :-

கருத்துலகின் குடிமகன்கள்...
இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு இணைய உலகம். கோடிக் கணக்கில் மக்கள் இணைய உலகின் குடிமக்களாக (Nettizen) உள்ளனர். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் கருத்துலகில் ஒன்றாகி முகநூல்(FaceBook) ட்விட்டர்களில்(Twitter) குடியிருக்கிறார்கள்.

மார்க் ஜூக்கர்பெர்க்...
முகநூல் 4.2.2004 இல் தொடங்கப்பட்டிருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) என்பவர் உருவாக்கி இருக்கிறார். அப்போது அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர். தனது அறை நண்பர்கள் மற்றும் உடன் படிப்பவர்களுடன் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்.

கோடிக்கணக்கான பயனாளிகள்...
மாணவர்களுக்காக மாணவர்கள் உருவாக்கிய முகநூல் இன்று வீடு, அலுவலகம், நண்பர்கள், உறவினர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது.

வாடிப் போகும் முகம்...
13 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கணக்கு தொடங்க முடிகிறது. வங்கிகளில் கூட கணக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் முகநூலில் கணக்கு இல்லை என்றால் முகம் வாடிப் போகிறது.

ஒரு கோடி மக்கள்....
அதேபோல் ட்விட்டர். 140 எழுத்துகளில் உள்ளத்தில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்த 50 கோடி மக்கள் இப்போது ட்விட்டரில் இருக்கிறார்கள்.

முதல் ஸ்டேட்டஸ்...
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவராக இருந்த ஜாக் டார்சியின் (JackDorsey) மூளையில் விளைந்த பயிர், வளர்ந்து பயன் தந்துகொண்டிருக்கிறது 21.3.2006 இரவு 9.50 மணிக்கு முதல் ட்விட்டர் செய்தி , "just setting up my twttr" என்று டார்சியால் அனுப்பபட்டிருக்கிறது.

பறவையின் கீச்சொலி...
பின்னர், 'twttr', 'twitter' ஆகியிருக்கிறது. ட்விட்டர் எனும் பெயர் ஒரு பறவையின் கீச்சொலியின் ஒலிபெயர்ப்பாம்.

ஒரு வழிப்பாதை...
முகநூல், ட்விட்டர் வரும்வரை, செய்தித் தொடர்பு ஒருவழிப் பாதையாகத்தான் இருந்தது. பதிலுக்குக் காத்திருக்க வேண்டியிருந்தது.

இருவழிப்பாதையானது....
முகநூலும், ட்விட்டரும் செய்தித் தொடர்பை இருவழிப்பாதை ஆக்கியிருக்கின்றன. கருத்தும் சிந்தனையும் ஏற்படுத்தும் அதிர்வுகளை உடனுக்குடன். உலகம் அறிந்துகொள்ள பயன்படுகின்றன. சாதி, மதம்,நாடுகளின் எல்லைகள் கடந்து மக்கள் உறவாடவும் உரையாடவும் முகநூலும் ட்விட்டரும் வழியமைத்திருக்கின்றன.

யாதும் ஊரே.. யாவரும் கேளிர்
எல்லாவற்றிற்கும் மேலாக, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்...
அதற்குக் கடந்த பிப்ரவரி பத்தாவதுநாள் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள முகநூலுக்கும்,அதனை உருவாக்கிய மார்க் அவர்களுக்கும், வரும் மார்ச் 21 ஆம் நாள் எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் ட்விட்டருக்கும், அதனை உருவாக்கிய டார்சி அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications