திமுக எம்.எல்.ஏக்களுடன் சகஜமாக பேசிய கருணாஸ்... திகிலுடன் பார்த்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸ், சட்டசபை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் கை குலுக்கி சகஜமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
இன்று காலையில் அவை கூடும்போது வந்த இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், திமுக எம்எல்ஏக்களுடன் கைக்குலுக்கி சகஜகமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பை திகில் கலந்த முகத்தோடு பார்த்துக்கொண்டே சென்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்.
அதிமுக -திமுக எம்.எல்.ஏக்கள் பொது இடங்களில் சந்தித்தால் ஜென்ம விரோதிகள் போலத்தான் நடந்து கொள்வார்கள். சட்டசபை வளாகத்தில் எதிரெதிரே சந்தித்தாலும் முகம் பார்த்து சிரிக்க கூட மாட்டார்கள். அப்படி சிரித்தாலும் போட்டோ எடுத்து ஊடகங்களில் வெளியாகி விட்டால் பதவிக்கு சிக்கலாகிவிடுமே என்ற அச்சம்தான்.
இந்த நிலையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸ் இன்று திமுக எம்.எல்.ஏக்களுடன் சகஜமாக சிரித்து பேசிய போட்டோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. என்ன நடவடிக்கை எடுப்பாங்களோ?