மகனுக்காக கட்சியினரை கழற்றிவிட்ட "நெல்லை நெப்போலியன்"!
நெல்லை: நெல்லை மாவட்டதிமுகவில் பதவிகளை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவத்தொடங்கியுள்ளது. அதன் காரணமாக அக்கட்சியின் உட்கட்சி தேர்தலில் தீடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர்.காலத்தில் நெல்லை நெப்போலியன் என்று வர்ணிக்கப்பட்ட கருப்பசாமிபாண்டியன் நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளராக பணியாற்றி வந்தார். பின்னர் இவர் அ.தி.மு.க.வில் இருந்து திமுகவுக்கு தாவியதால் இவரை கவுரவிக்கும் வண்ணம் திமுக தலைமை இவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது.
இதன் பின் நெல்லை திமுகவில் இரண்டு அணிகள் உருவானது. ஏற்கனவே நீண்டகாலமாக மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் ஒரு தரப்பினர்.

நெல்லை மாவட்டம் கட்சி அடிப்படையில் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்கள் எனவும் மாநகர பகுதி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த கருப்பசாமிபாண்டியன் மாவட்ட பொறுப்பிற்கு பொறுப்பேற்க மாட்டேன். பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடைசியாக நெல்லையில் நடந்த தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது நடந்துவரும் தி.மு.க.உள் கட்சித் தேர்தலில் கடுமையான கோஷ்டி பூசல்கள் உருவாகி நீதிமன்றம் வரை சென்றன. தற்போது மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடங்கியுள்ளதால் இதில் போட்டியிடஉள்ளவர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மனுக்கள் தாக்கல் துவங்கியது. இதுவரை இல்லாமல், நெல்லை மாவட்ட செயலாளராக இருந்த கருப்பசாமிபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் பதவியை தமது மூத்த மகன் சங்கருக்கு வாங்கித்தருவதற்காக நேற்று மனு செய்தார்.
மாநகர செயலாளர் பொறுப்பிற்கு இவருடன் இருந்த மாநகர செயலாளர் அப்துல்வகாப், மாணவரணி செயலாளர் அருண்குமார், மறைந்த முன்னாள் மேயர் ஏ.எல்.எஸ். மகன் லட்சுமணன், உள்ளிட்டவர்கள் மனு செய்துள்ளனர்.
ஆனால் அவர்களை ஒதுக்கிவிட்டு தனது மகனுக்காக களத்தில் கானா இறங்கியுள்ளது, கட்சியினரிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மனுதாக்கல் செய்துள்ளார். நெல்லை மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல் புகையத் தொடங்கியுள்ளதால் ஏராளமானவர்கள் அதிமுக பக்கம் தலை சாய்க்க அதிக வாய்ப்பு உள்ளதாக மாவட்டம் முழுவதும் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications