தலைவரா, கொடியா, தலைநகரமா?.. 'டக் டக்'கென்று கூறி அசத்தும் சிறுவன்!
கரூர்: கரூரில் உலகத் தலைவர்களின் பெயரையும், நாட்டின் கொடிகளை அடையாளம் காட்டி தனது நினைவாற்றல் சக்தியால் அனைவரையும் கவருகிறான் ஒரு சிறுவன்.
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புலியூர் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சார்ந்தவர் கே.என்.பெரியசாமி, இவரது புனைப்பெயரை கூறினால் அப்பகுதி மக்களுக்கு தெரியும், அதாவது ரோசாப்பூ பெரியசாமி. இவரது மனைவி பூங்குறளி, இவர் கரூர் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பெரியசாமியின் சொந்த தொழில் விவசாயம் ஆகும். மேலும் கடந்த 2011 ல் புலியூரில் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்களது மகன் பெ.சுகனேஸ் (வயது நான்கே முக்கால்). இச்சிறுவன் கரூர் அருகே உள்ள வேட்டமங்கலம் ராசமா மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறான். இந்நிலையில் இச்சிறுவன் 200 உலக நாடுகளின் கொடி எது என கண்டுபிடித்து உடனே சொல்லும் நினைவாற்றல் படைத்தவன் ஆவான்.

மேலும் 30 திருக்குறளையும், 80 உலக தலைவர்களின் பெயர்களையும் கூறுவதோடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், அதன் தலைநகரங்களையும், மாநில தலைவர்களின் பெயர்களையும் கூறி பட், பட்டென்று கூறி வருகிறான். இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் கூறி வருகிறான்.
கடந்த 2 வருடங்களாக இவனின் நினைவாற்றல் கூடி வருகிறது. மேலும் இது மட்டுமில்லாமல் இவனின் செயலை பாராட்டி உத்திரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, லோக்சபா துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் ஆகியோரின் பாராட்டுகளையும் பெற்றுள்ள இந்த சிறுவன் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக்கி காட்டுவதே எனது லட்சியம் என சுகனேஸ்ஸின் தந்தை பெரியசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications