19 வருடங்களாக சில்க் ஸ்மிதாவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் கரூர் ரசிகர்கள்!
கரூர்: தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான சில்க் ஸ்மிதாவின் மறைவை அடுத்து அவருக்கு கிட்டதட்ட 19 வருடங்களாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
தென்னிந்திய திரைப்பட கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதா கடந்த 1979 ஆம் ஆண்டில் வண்டிசக்கரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில், தன் கவர்ச்சி நடன மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்தது.
தனிப்பட்ட வாழ்கையில் பல தோல்விகளை சந்தித்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சில்க் ஸ்மிதா இறந்து 19 ஆண்டுகளான நிலையிலும் கரூரை அடுத்த சணப்பிரட்டியை சேர்ந்த ரசிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் நினைவு நாள் சுவரொட்டி அடித்து துக்கம் கடைபிடித்து வருகின்றனர்.
சில்க் ஸ்மிதா இறந்த நாளையொட்டி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கரூர் மாவட்டத்தின் பல பகுதியில் சில்க் ஸ்மிதா படத்துடன் போஸ்டர்கள் ஒட்டி இரங்கல் தெரிவித்துள்ளனர்.